Monday, March 28, 2011

மாற்றுத் தொழிற்சங்கங்களின் செல்வாக்கு அதிகரிப்பு

பதுளை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பட்டியலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக 30 வேட்பாளர்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நிறுத்தப்பட்டபோதும் 7 உறுப்பினர்கள் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனால் மலையக மக்கள் முன்னணி மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிட்டபோதும் 7 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக 14 வேட்பாளர்கள் போட்டியிட்டபோதும் 9 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இ.தொ.கா.வுக்கு ஊவா மாகாண சபையில் அமைச்சர் ஒருவரும் மத்திய அரசாங்கத்திலும் பிரதி மற்றும் அமைச்சர் பதவிகளுடன் அதிகாரங்களும் இருந்த பொழுதும் பதுளை மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பசறை, பதுளை, ஹாலிஎல ஆகிய பிரதேச சபைகளிலும் ப்புத்தளை, பண்டாரவளை ஆகிய நகரசபைகளிலும் இ.தொ.கா.வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
எனினும் பசறை ஹாலிஎல , பதுளை பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் இ.தொ.கா.வுக்கு கணிசமான அங்கத்தினர்கள் இருக்கின்றபோதும் இவர்கள் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

விசேடமாக பசறை, பதுளை, பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் இ.தொ.கா.வினர் பெரும்பாலும் ஐ.தே.க.பட்டியலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களை ஆதரித்ததைக் காணக் கூடியதாகவிருந்தது. இதற்குச் சான்றாக பசறை,பதுளை, ஹாலி எல, பண்டாரவளை ஆகிய பிரதேச சபைகளில் போட்டியிட்ட ஐ.தே.க. தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.பசறை பிரதேச சபையில் ஆளும் கட்சிப் பட்டியலில் போட்டியிட்ட இ.தொ.கா.வேட்பாளர்கள் மூவரும் தோல்வியடைந்துள்ள போதும் அதே பட்டியலில் முன்னாள் பிரதியமைச்சரும் பசறை பொ.ஐ.மு. அமைப்பாளருமான வடிவேல் சுரேஸினால் நிறுத்தப்பட்ட தமிழ் வேட்பாளர் எஸ்.தயாபரன் 1955 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றதுடன் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

ஏன் இவ்வளவு சேவையினை மேற்கொண்டும் மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை அல்லது புறக்கணித்தனர் என்பதை இ.தொ.கா.வின் தலைமைப்பீடம் இப்போதே ஆராய்ந்து மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில் இனிவரும் தேர்தல்கள் இதைவிட இன்னும் பாரிய பின்னடைவை எதிர்கொள்ள வேண்டியதொரு நிலை ஏற்படும் என்று இ.தொ.கா.ஆதரவாளர்கள் கூறுகின்றார்கள்.

2013 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் தற்போதைய நிலையை விட மிகவும் பாதிக்கப்படலாம்.கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் ஆளும் கட்சிப் பட்டியலில் போட்டியிட்ட வடிவேல் சுரேஸ் 27 ஆயிரம் வாக்குகளையும், அதே பட்டியலில் போட்டியிட்ட இ.தொ.கா.வேட்பாளர்கள் இருவரும் 7 ஆயிரம் வாக்குகளையே பெற்றனர்.

ஐ.தே.கட்சிப் பட்டியலில் போட்டியிட்ட கே.வேலாயுதம் 25 ஆயிரம், எம்.சச்சிதானந்தன் 25 ஆயிரம் வாக்குகளையும் பெற்றனர். இதிலும் இ.தொ.கா.படுதோல்வியை தழுவியபோதும் இது குறித்து கவனம் செலுத்தி மாற்று நடவடிக்கை மேற்கொள்ளாததன் பிரதிபலிப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது.

பதுளை மாவட்டத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் அடாவடித்தனத்தையும் சர்வாதிகார அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லையென்பதுடன் ஜனநாயக முறையிலான அரசியலையே விரும்புகின்றனர் என்பது பாராளுமன்றம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் மக்கள் தெளிவாக தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணிக்கு ஒரு மாகாண சபை உறுப்பினரும் மத்திய அரசாங்கத்தில் ஒரு உறுப்பினரும் மாத்திரம் இருக்கின்றபோதும் உள்ளூராட்சித் தேர்தலில் 7 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளதற்கு ஊவா மாகாண சபை உறுப்பினர் எ.அரவிந்குமாரின் தனிப்பட்ட வெற்றியென்றே கூறவேண்டும்.


பெண் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாக விசனம்



தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலைத்தலங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென பல்வேறு தரப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் சில தோட்டங்களில் பெண் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரும்பாலான தோட்டவீதிகள் தற்போது குன்றும் குழியுமாக காணப்படுவதோடு; தோட்ட வாகனங்களின் போக்குவரத்துகள் இடம்பெறாத காரணத்தினால் கொழுந்து பறிக்கின்ற பெண்கள் தாம் பறித்த கொழுந்தினை நீண்ட நேரம் சுமந்து சென்று நிறுவை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.அத்துடன் தோட்டங்களில் கொழுந்து நிறுவைக்காக பயன்படுத்தப்படுகின்ற தராசுகளின் நம்பகத்தன்மையும் குறைந்து வருவதால் தமது உழைப்பு சுரண்டப்படுவதாக பெண்தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான தொழில் ரீதியான உரிமை மீறல்கள் குறித்து தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்கள் அக்கறைகொள்வதில்லை எனவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

இவ்வாறன நிலையில் பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தில் பெண்தொழிலாளர்கள் பறிக்கின்ற கொழுந்தினை இந்தத் தோட்ட நிர்வாகம் நிறுக்கும் முறையானது பாரியதொரு மனித உரிமை மீறலாகுமென்று சுட்டிக்காட்டப்படுகின்றது.பெரும்பாலும் தோட்டங்களில் தொழிலாளர்கள் பறிக்கப்பட்ட கொழுந்தின் அளவை அறிந்து கொள்வற்காக தேயிலை மலைகளிலேயே நிறுக்கப்படுவது வாடிக்கையாகும்.அதன் போது இரும்பினால் அல்லது மரத்தடியினால் செய்யப்பட்ட கம்பங்களை பிடித்துக்கொண்டு அதன் நடுவில் அகலாமான கூடை ஒன்றில் கொழுந்து கொட்டப்பட்டு கொழுந்தின் அளவு கணிக்கப்படுகின்றது.இதனால் கம்பங்களைத் தலையில் சுமந்து கொண்டு நிற்கும் பெண்தொழிலாளர்கள் உடல் உபாதைகளுக்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு வேலைத்தலங்களில் பெருந்தோட்டப்பகுதி பெண்தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து தோட்டத்தொழிற்சங்கங்கள் உடனடியாக ஆராய்ந்து தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டுமென தொழிலாளர் நலன் சார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Wednesday, March 23, 2011

தொழிற்சங்கங்கள்- முதலாளிமார் சம்மேளத்திற்கிடயிலான சந்திப்பு அடுத்தவாரம்

தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனத்திற்கிடயிலான பேச்சுவார்த்த எதிர்வரும் புதன்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பள உயர்வு கூட்டொப்பந்தம் தொடர்பான கூட்டொப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்களுக்கிடயிலான சந்திப்பு ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளன காரியாலயத்தில் நடபெறவுள்ளது.

எதிர்வரும் 31-03-2011 ஆம் திகதியுடன் கூட்டொப்பந்தம் நிறைவு பெறுகின்ற நிலையில் எதிர்வரும் கூட்டொப்பந்தம் மூலம் இன்றைய வாழ்க்கைச் செலவு உயர்வுக்கேற்ற வகையிலான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென கூட்டொப்பந்தத்தில் கையெழுத்திடாத தொழிற்சங்கங்கள் கோரிவருகின்றன.

அதாவது ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகியவை இணைந்து அமைத்துள்ள மலையக தமிழ்க் கூட்டமைப்பு மொத்த நாட்சம்பளமாக 750 ரூபா எதிர்வரும் கூட்டொப்பந்தம் மூலம் பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரியுள்ளது. தோட்டத் தொழிலாளருக்கு நிபந்தனையற்ற குறைந்தபட்ச நாட் சம்பளமாக 500 ரூபாவும் மேலதிக ஊக்குவிப்பாக 250 ரூபாவும் வழங்கப்பட வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இதேவேளை ஜே.வி.பி.யின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இன்றைய வாழ்க்கை செலவு உயர்வுக்கு ஏற்ப நிபந்தனையற்ற நாட்சம்பளமாக 700 ரூபா வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் தற்போது என்றுமில்லாத வகையில் பொருட்களின் விலை அதிகரிப்பினால் கஷ்ட நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்த 700 ரூபா சம்பள உயர்வு அவசியமானதென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

இதேவேளை தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டொப்பந்தம் மூலம் நிபந்தனையற்ற அடிப்படை சம்பளமாக 500 ரூபாவும் ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 250 ரூபாவுமாக 750 ரூபா நாட்சம்பளம் வழங்கப்பட வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்

கொழுந்து நிறுவைக்குப் பெண் தொழிலாளர்களின் பரிதாபகரமான நிலைமை



தோட்டத்தொழிலாளர்களுக்கு வேலைத்தளங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென பல்வேறு தரப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் சில தோட்டங்களில் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கின்ற பெருந்தோட்டக் கம்பனிகளிடமிருந்து தேயிலைத் தூளினை கொள்வனவு செய்வதில் வெளிநாடுகள் சில ஆர்வம் செலுத்தி வருகின்றன.

சில தோட்டக் கம்பனிகள் வேலைத் தளங்களில் தொழிலாளர்களின் நலன் கருதி சில நலனோம்புத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் நவீனகால அடிமைகளாக நடத்தப்படுகின்றனர் என்பதை இந்தப் படங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

பெரும்பாலும் தோட்டங்களில் தொழிலாளர்கள் பறிக்கப்பட்ட கொழுந்தின் அளவை அறிந்து கொள்வதற்காக தேயிலை மலைகளிலேயே நிறுக்கப்படுவது வாடிக்கையாகும்.

அதன் போது இரும்பினால் அல்லது மரத்தடியினால் செய்யப்பட்ட கம்பங்களை பிடித்துக்கொண்டு அதன் நடுவில் அகலமான கூடை ஒன்றில் கொழுந்து கொட்டப்பட்டு கொழுந்தின் அளவு கணிக்கப்படுகின்றது.

ஆனால் தெரேசியா தோட்டத்தில் இரண்டு பெண்கள் தமது தலையில் கம்புகளை தாங்கிக் கொண்டு கொழுந்தினை நிறுவை செய்வது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.இவ்விடயம் தொடர்பில் மலையகத் தொழிற்சங்கங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றன?

Monday, March 21, 2011

மலையகத் தமிழ்த் தலைமைகள் மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடுகின்றனவா?

மலையக மக்களின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பம் முதலே போராட்டமாகத்தான் இருந்து வருகிறது. மலைகளில் கொழுந்துக்கூடையும் மண்வெட்டியும் சுமக்கும் இவர்கள் மனதில் அதற்கும் மேலான சுமைகளைத் தாங்கியவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களின் வாழ்க்கை ஜீவனத்தையும் நாளாந்த நடைமுறையினையும் மூன்றாவது மனிதனின் பார்வையிலன்றி அவர்களுக்குள் ஒருவராக இருந்து பார்த்ததின் பிரதிபலன் நிச்சயம் கண்ணீராகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் அந்தளவுக்கு வலிகள் நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது.

தங்கக் காசும் தங்குவதற்கு இடமும் இலவசமாம். தேயிலைத்தூரில் மாசியும் தேங்காயும் கிடைக்குமாம் என நம்பி வந்து ஏமாற்றப்பட்டவர்கள் என நாட்டார் பாடல்கள் மற்றும் கேளிக்கையாகக் கூறுவதுண்டு. அப்படியென்றால் இவர்களின் ஆரம்பமே ஏமாற்றம் என்பது தெளிவாகிறது. இதன் தொடக்கமோ தெரியவில்லை இவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக யாரோ ஒருவரால் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

வறுமை என்னும் தீயின் அனல் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்க அரசியல் இலாபம் தேடும் சில தொழிற்சங்கங்களும் அரசியல் தலைமைகளும் மறுபுறத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எந்தவொரு தொழிற்சங்கமாயினும் சரி அரசியல் கட்சியாயினும் சரி மக்களின் நன்மை கருதி ஆரம்பிக்கப்பட்டதென்றால் அவர்களின் கொள்கைகள் இறுதி வரை நிறைவேற்றப்பட வேண்டும். தாமே ஒட்டுமொத்த மலையக மக்களின் பிரதிநிதிகள் - சேவைக்கு முன்னுதாரணமானவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் தமது காலத்தில், பேசுவது போல் செயலிலும் தீரத்தைக் காட்டுவார்களாயின் வரலாற்றில் அவர்களுடைய பெயர் நிச்சயம் எழுதப்படும்.

ஆனால், அதற்கு மாறான சம்பவங்களே இங்கு நடைபெறுகின்றன. அப்பாவித் தமிழர்களின் வாழ்க்கையை திறந்த மேடையாக்கிக்கொள்ள முனையும் பலர் அதில் நாடகமாடி வெளித்தோற்றத்தில் சிறந்தவர்கள் எனக் காட்ட முற்படுகிறார்கள். மலையகத்தில் இயங்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆயினும் சரி மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட ஏனைய தொழிற்சங்கங்களாயினும் சரி அவற்றுக்கென்று தனித்துவம், தனிக்கொள்கை உண்டு. அவற்றை அவை எந்தளவுக்கு அடைந்துள்ளன என்பதை சுயமதிப்பீடு செய்தல் அவசியமாகும்.

குறிப்பாக மலையகத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்துக்கு பிற்போக்குடைய கொள்கைகள் பின்பற்றப்பட்டமைக்கான காரணத்தை பொறுப்புக் கூற வேண்டிய அனைத்து தொழிற்சங்கங்களும் பதிலளிக்க முன்வர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

பாதை செப்பனிடுவதும், கூரைத் தகடுகள் கொடுப்பதும் மட்டுமே மலையக அபிவிருத்தியும் மக்களுக்கான சேவையும் என்ற பிரதான நோக்கினை அரசியல் தலைவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை தீர்த்து வைப்பதன் மூலம் மலையகத்தில் நீண்ட காலமாக இருந்துவரும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.

அடுத்து மலையகக் கல்வியில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. சிறுபராயத்தில் குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு கிடைக்காததால் அவர்களின் அறிவாற்றலிலும் மந்த நிலை காணப்படுகிறது. தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படுமானால் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாமல்லவா?

பொது நலனுக்காக அரசியலில் ஈடுபடுவதாகக் கூறும் அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் மக்களின் நலனுக்காக இணைந்து குரல் கொடுக்காமைக்குக் காரணம் என்ன?

அதேபோன்று சிறுவர் தொழிலாளர்கள்| என்ற கொடுமை மலையகமெங்கும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்குப் பெற்றோர் விழிப்புணர்ச்சி கொள்ளாதது முக்கிய காரணம் எனினும் வறுமையே தூண்டுகோலாக அமைகிறது. இங்கு வருமான(சம்பள) அதிகரிப்பின் தேவை உள்ளதை நம் தலைவர்கள் உணர்வார்களா?

வேதனையோடு தொடரும் மக்களின் வாழ்க்கையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் தலைமைகள், வரலாற்றுக்குக் கட்டாயம் பதில் சொல்லியாக வேண்டும் அல்லது கறைபடிந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு கறுப்புப் புள்ளியாக அவர்களின் பெயர் என்றும் மாறாத வடுவாகி விடும்.

அரசியல், தொழிற்சங்க பேதங்கள் தேவையில்லை, யார் பெரியவர் என்ற நிலையும் அவசியமில்லை, மக்களுக்காக ஒன்றிணைந்தால் நிச்சயமாகச் சாதிக்க முடியும். அது எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வாக அமைவதுடன் ஆரோக்கியமான, காத்திரமான எதிர்காலத்துக்கு நல்ல அடித்தளமாகவும் அமையும்.

மக்களால் மக்களுக்காக தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் இதுபற்றிச் சிந்திக்க வேண்டும். வலிமை மிக்க மனித உணர்வுகளை சுயலாபத்துக்காக கிள்ளிக் கொலைசெய்யாது உண்மையான அரசியல் சேவையை வழங்க முன்வருதலே காலத்தின் தேவையாகும்.

-இராமானுஜம் நிர்ஷன்

மலையக மக்கள் மின்சாரம் பெற சலுகை

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள உள்ள மக்கள் மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கு தோட்ட நிர்வாகத்தின் கடிதம் அவசியமில்லை என மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தாலே போதுமானது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

2012 ஆண்டுக்கு முன்னதாக தோட்டங்களில் குடியிருக்கும் சகலருக்கும் மின்சாரம் வழங்கும் திட்டத்தை பூர்த்திசெய்யவும், நாடு தழுவிய ரீதியில் 4ஆயிரத்து 500 கிராமங்களில் 4ஆயிரத்து 500 மின்மாற்றிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தீவுகள், மலைப் பிரதேசங்கள், வெகு தொலைவிலுள்ள கிராமங்களுக்கு ஆகிய பகுதிகளில் வாழும் வசதிகளற்ற 40 ஆயிரம் குடும்பங்களுக்கு சூரிய சக்தி, காற்றலை மின் உற்பத்தி மற்றும் சிறிய நீர்வீழ்ச்சிகள் மூலம் மின் இணைப்புகள் வழங்கத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Wednesday, March 16, 2011

வாக்குகள் சிதறாதிருக்க வழிசமைப்போம்

எந்தவொரு நாட்டிலும் பொது நிர்வாக கட்டமைப்பு மிக முக்கியமானது. இந்த நிர்வாகத்தை நாம் அரசு என்று அழைக்கின்றோம். இந்த அரசை முன்பு நடத்தியவர்களை அரசர்கள் என்று அழைக்கின்றனர். அரசர்கள் நாட்டை ஆண்ட காலத்தை முடியாட்சி எனவும், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தை காலனித்துவ ஆட்சி என்றும் மக்கள் தங்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுத்து தம்மை ஆளச் செய்யும் முறைமை மக்களாட்சி என்றும் கூறுகின்றோம்.

இந்த மக்களாட்சியில் மிக பிரதானமான ஆட்சியே உள்ளுராட்சி என்பது இது மக்கள் தாம் வாழ்கின்ற பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கொள்வதற்காக தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் ஒரு முறை என்பதோடு எப்போதும் தம்மோடு வாழும் ஒரு நபரை குறிப்பாகத் தமது பிரதேசத்தில் தமக்காக சேவை செய்யக்கூடிய ஒருவரை தெரிவு செய்வதே ஆகும். இலங்கையை பொறுத்தவரை உள்ள ஆட்சி மட்டங்களை நாம் பார்ப்போமேயானால் அரசியல் நிர்வாகத்தினை இலகுபடுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை ஆற்றுவதற்கு மத்தி;ய அரசாங்கத்தில் உள்ள ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தைத் தவிர இரு அரசியல் சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவையாவன. மாகாணசபைகள் உள்ளுராட்சி மன்றங்கள். ஆகவே மாகாண சபையானது நடைமுறையில் உள்ள யாப்பிற்கு 1987ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் விளைவாகத் தோற்றம் பெற்ற ஒன்றாகும். உள்ளுர் ஆட்சி மன்றங்கள் 1930களின் பின்னர் படிப்படியாக வளர்ந்த நிறுவன கட்டமைப்பாகவும் பேசப்படுகின்றது.

இலங்கையில் 09 மாகாணசபைகள் மாவட்டங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய மாகாணசபை கண்டி, மாத்தளை நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களை எடுத்துக் கொண்டால் அதில் மூன்று அமைப்புக்களாக நாம் பார்க்கலாம். 01. மாநகரசபை, 02. நகரசபை, 03 பிரதேசசபை. இதில் மாநகரசபை என்பது பெரிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அமைப்பாகும்.
இவைகள் நகரம் சார்ந்த கிராம சேவகர் பிரிவுகள் பலவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டதாகும். நகரசபை என்பது சிறு நகரங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். எனவே பிரதேச சபைகளும் கிராம சேவகர் பிரிவுகள் பலவற்றினை ஒன்றாக்கி உருவாக்கப்பட்ட பிரதேசசபைகளை எடுத்துக் கொண்டால் அம்பகமுவ, லிந்துல, நுவரெலியா, கொத்மலை, உடபலாத்த, போன்ற பிரதேச சபைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

பிரதேச சபைகள் பற்றியும் அதன் சேவைகள் பற்றியும் ஆராய்வோமானால் முன்பு குறிப்பிட்டது போலவே இலங்கையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் ஒன்றான இம் மன்றம் 1987ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 15ம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாகும். ஏனைய எல்லா உள்ளுராட்சி மன்றங்களையும் விட இச் சபை மக்களுக்கு மிகவும் அண்மையில் உள்ள அரசியல் நிறுவனமாகும்.

பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டதன் நோக்கங்களில் பிரதானமானது யாதெனில் பிரதேசததில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்வதோடு அவ்வகையில் பிரசே சபையானது பிரசே சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு உட்பட்ட பிரஜைகளின் தேவைகளையும், பெற்றுக்கொடுக்க கடமைப்பட்டுள்ளது என்பதேயாகும்.

அத்துடன் பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேசசபைகளுக்கிடையில் வேறுபடலாம். அது தேர்தல்கள் ஆணையகத்தினால் பிரதேச சபைக்கு உட்பட்ட மக்களின் எண்ணிக்கை மற்றும் நிலப்பரப்பு என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது.

பாராளுமன்றம் அல்லது மாகாண சபையில் இருப்பது போன்ற பிரதேச சபைகளில எதிர்க்டசி என்று ஒன்று இருப்பதில்லை. மாறாக எல்லோரும் இணைந்து தமது பிரதேச மக்களுக்கு சேவைகளை செய்ய வேண்டும் என்பதே பிரதேச சபையினூடாக எதிர்பார்க்கப்பட்டதாகும். மக்கள் இச்சபைக்காக வாக்களித்த போதிலும் வெற்றி பெற்ற கட்சியின் அதிக விருப்பு வாக்குகளை பெற்றவர் தலைவராக வருவதோடு சில சமயங்களில் தலைவர் யார் என்பதை வெற்றி பெற்ற அரசியல் கட்சியே தீர்மானிக்கின்ற நிலையும் ஏற்படுகின்றது.

இம்முறை 06-01-2011 அன்று வெளிவந்த 1687 இலக்க வர்த்தமானி அறிவித்தலின்படி 4 மாநகர சபைகள், 39 நகரசபைகள், 258 பிரதேச சபைகளுக்கான 301 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் மார்ச் மாதம் 17ம் திகதி 2009ம் ஆண்டு தேர்தல் சட்ட விதிகளுக்கமைவாகவே தேர்தல்கள் நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. பல்வேறு சுயேட்சைக் குழுக்களும் அரசியல் கட்சிகளும் கணிசமான அளவு தேர்தலில் போட்டியிட களம் இறங்கிய போதிலும் மலையக தமிழர் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களும் எவ்வித ஒற்றுமையும் இன்றி மக்களிடம் தங்களுக்கு வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் செயற்பட்டு வருகின்றனர். சிலர் தங்களுது குடும்பங்களை மையமாகவும், சொந்தங்கள் மட்டும் தமக்கு வாக்களித்தால் போதும் என்ற அடிப்படையில் இயங்குகனிறனர். இதனால் வாக்குகள் சிதறடிக்கப்படுமே தவிர இறுதியில் யாருமே வெற்றிபெற முடியாமல் போகும் அபாய நிலையே அதிகம் காணப்படுகிறது.

ஏலவே பிரதேச சபையின் 33வது சரத்திற்கமைய தோட்டக் குடியிருப்புக்கள் மற்றும் நிலப்பிரதேசம் பிரதேச சபைக்கு உள்வாங்கப்படாமையினால் பிரதேச சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தோட்ட மக்களுக்கு சென்றடைவதில் தடை எற்பட்டிருக்கின்றது. தொடர்ந்தும் தோட்ட மக்கள் வாக்களிக்கும் இயந்திரங்களாக மட்டுமே வாழும் நிலையில் எதிர்வரும் தேர்தலில் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் ஏதும் நம்மை உண்டா என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தடுமாற்றத்துடன் இருக்கின்றனர்.

சில தோட்டங்களில் வேட்பாளர்கள் சென்று தங்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டபோது இம் முறை தேர்தலை பகிஷ்கரிக்கப்ப போவதாகவும் கூறியுள்ளனர். காரணம் இத் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் தமக்கு எந்த நன்மையும் கிட்ட போவதில்லை என்பதனால். எனவே இவ்விடயத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேரடியாக தனது கவனத்தை செலுத்தி 33வது பிரதேச சபை சரத்தை பற்றி பரிசீலித்து மலையக மக்களையும் அவர் தம் அபிவிருத்தயின் பங்காளர்களாக மாற்ற வேண்டும் என்பது மக்களின எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இந்த 33வது சட்டத் திருத்தம் தொடர்பாக மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளும் இதற்கான ஆதரவை வழங்குவதன் மூலம் மலையக மக்களையும் தேசிய நீரோட்டத்தில் கலக்கச் செய்ய முடியும் என்பது உறுதி

சந்தனம் சத்தியானந்தன்

நன்றி - வீரகேசரி