Wednesday, October 14, 2009

மீண்டும் சம்பள உயர்வு போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்தை தீபாவளி பண்டிகைக்குப் பின்னர் மீண்டும் முன்னெடுப்பதற்கு மலையக தொழிற்சங்கங்கள் தயாராவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தேசிய தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆரம்பிக்கவுள்ளதாக இ.தொ.ஐ.மு தொழிற்சங்க தலைவர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் கடந்த செப்டம்பர் மாதம் முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் செய்துகொள்ளப்படட கூட்டு ஒப்பந்தத்தில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகிறது என்றார். ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழிய நம்பிக்கை நிதி ஆகியவற்றை வழங்குமாறு தொழில்கொள்வோருக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள போதிலும், ஒப்புக் கொள்ளப்பட்ட 405 ரூபா சம்பளமே வழங்கப்படுவதில்லை எனத்; தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இந்த விடயங்கள் குறித்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மலையக மக்கள் முன்னணியும் இந்தப் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றார்

Tuesday, October 13, 2009

மலையக மக்களின் உயர்வு பற்றி தந்தையிடம் பேசுவேன் -கனிமொழி

மலையகப் பெருந்தோட்ட வாழ் மக்களின் வாழ்வாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் மேம்படுத்த மத்திய மாநில அரசுகளின் உதவிகளைப் பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்வதாக இந்திய நாடாளுமன்ற குழுத்தலைவர் தி.மு.க முன்னாள் அமைச்சர் ரி. ஆர். பாலு உறுதியளித்துள்ளார்.
மலையகப் பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே இவ்வாறு தெரிவித்தார். மேற்படி மலையகம் வாழ் தமிழ் மக்களின் நிலைமைகளைத் தமது தந்தையார் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும், அம் மக்களின் நிலைமைகளை எடுத்துக்கூறி அவர்களின் உயர்வுக்கு வழிவகுப்பதாகவும் முதல்வரின் புதல்வியும் எம்.பி யுமான கவிஞர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் ‘லயன்’ வரிசைக்குடியிருப்பு வாழ்க்கை முறையை நேரில் சென்று பார்வையிட்ட இந்திய நாடாளுமன்ற குழுவினர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டுமென்றும், அதற்கு ஒத்துழைப்பதாகவும் கூறினர்.
அதேநேரம் மலையகத்தில் உயர் கல்விக் கலாசாலைகளை உருவாக்குவதற்கு உதவுவதாகவும் கல்வித்துறையை மேம்படுத்த தேவையான உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
அட்டனில் முக்கிய இடங்களுக்கு இந்திய எம்.பிக்கள் விஜயம்

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய எம்.பிக்கள் குழுவினர் நேற்று திங்கட்கிழமை நோர்வூட் நகரில் அமைந்துள்ள தொண்டமான் விளையாட்டரங்கைப் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இ. தொ. கா. பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் செய்திருந்தார்.
முன்னாள் அமைச்சரும், இந்திய நாடாளுமன்ற குழுவுக்குத் தலைமை தாங்கியவருமான டி. ஆர். பாலு தலைமையில், கனிமொழி எம்.பி, தொல். திருமாவளவன் எம்.பி. ஆகியோரும் ஹெலிகொப்டர் மூலம் நோர்வூட் தொண்டமான் விளையாட்டு அரங்குக்கு வந்து சேர்ந்தனர்.
அங்கிருந்து வாகனப் பேரணியில் அட்டன் மாநகர் மணிக்கூண்டுச் சந்தி வழியாக சௌமியமூர்த்தி தொண்டமான் தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் செய்தனர்.
கைத்தொழில் பயிற்சி அரங்குகளை அவர்கள் பார்வையிட்டனர். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், பிரதி அமைச்சர் எஸ். ஜெகதீஸ்வரன், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் மற்றும் இ. தொ. கா. பிரதித் தலைவர்களும், கலந்துகொண்டனர்.
10 பேர் கொண்ட இந்திய நாடாளுமன்ற குழுவினர் கொட்டகாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் தொழிலாளர் பேட்டையைப் பார்வையிட்டு பின்னர் நுவரெலியா நகர் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இக் குழுவினரைச் சந்திப்பதற்கு நகர வர்த்தகர்கள் உட்பட பொதுமக்கள் பெருந்திரளாக அட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி கல்லூரிக்கு வந்திருந்தனர். நுவரெலியா, அட்டன், பொலிசார் பாதுகாப்பு வழங்கினர். பலத்த பாதுகாப்புடன் இந்திய நாடாளுமன்ற குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தீபாவளி முற்பணமாக 7500 ரூபா- சங்கங்கள் முன் வருமா?

தோட்டத் தொழிலாளர்கள் 290 ரூபா நாட் சம்பளம் பெறும்போது தீபாவளி முற்பணமாக 4500 ரூபாவை தோட்ட நிருவாகம் வழங்கி வந்தது. புதிய கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டதை பின் நாட்சம்பளம் 405 ரூபா உயர்த்தப்பட்டதையிட்டு தொழிற்சங்கங்களை பாராட்டுவதோடு இம்முறை தீபாவளி முற்பணத்தை குறைந்தது 7500 ரூபா பெற்றுத் தர தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் தீபாவளிப் பண்டிகையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வேளையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு தமது தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய போதியளவு வருமானமில்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். பெருந்தோட்டங்களை பொறுத்தவரை தீபாவளி பண்டிகை மிக விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும். பெரும்பாலான தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகை முற்பணத்தை நம்பித்தான் திட்டம் வகுக்கின்றனர். இவை ஒன்று மட்டும்தான் தொழிலாளர்களுக்கு வட்டி இல்லாமல் 10 மாத தவணை முறையில் கழித்துக் கொள்ளும் விதத்தில் வழங்கப்படுகிறது. எனவே கடந்த காலங்களில் வழங்கப்பட்ட 4500 ரூபா முற்பணத்தை அதிகரித்து 7500 ரூபா வழங்கதோட்ட நிருவாகம் முன்வர வேண்டும்.
தோட்டங்களில் மழை, வெயில் என்று பாராமல் தொழிலாளர்கள் தோட்டங்களுக்கு அதிக லாபத்தைப்பெற்றுக் கொடுக்கின்றனர். இதனை உணர்ந்து தோட்ட நிருவாகம் அவர்களின் முற்பணத்தை அதிகரிக்க முன்வர வேண்டும். புதிய கூட்டு ஒப்பந்தத்தின்படி தொழிலாளர்களுக்கு 405 ரூபா நாட் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நாளைக்கு 115 ரூபா சம்பளம் உயர்ந்துள்ளது. இதற்கு அமைய நிலுவை சம்பளம் ஏப்ரல் மாதத்திலிருந்து வழங்கப்பட வேண்டும். இந்த நிலுவையில் 50 வீதத்தை எதிர்வரும் தீபாவளி பணிடிக்கைக்கு முன் கொடுக்க வேண்டும். 25 வீதத்தை நத்தார் பண்டிக்கைக்கு முன்னமும், எஞ்சியுள்ள 25 வீதத்தை அடுத்தாண்டு ஜனவரியில் அதாவது பொங்கல் தினத்துக்கு முன்னர் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
தொழிலாளி ஒருவர் 25 நாட்கள் ஒழுங்காக வேலை செய்திருந்தால் ஒரு நாளைக்கு 115 ரூபா அடிப்படையில் 25x115 =2875 ரூபா ஆகும். (ஒரு மாதம்) (நாட்கள்) - சம்பளம். ஐந்த மாதம் 5X2875= ரூபா 14375 ரூபா நிலுவை சம்பளம் கிடைக்கும், இதில் உதாரணமாக மொத்தம் ஐம்பது வீதம் 7187.50 ஆகும். தீபாவளி பண்டிகைக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும். மேற்கூறிய தீபாவளி முற்பணமும், அதிகரித்த புதிய சம்பளத்தின் நிலுவை சம்பளமும் இரண்டும் ஒழுங்காகக் கிடைத்தால், (2009) இம்முறை தோட்டங்களில் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்தை காண முடியும். இல்லாது போனால் தீபாவளி களை காட்டாமல் அமைதியாகிவிடும் என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டி. வசந்தகுமார்

Saturday, October 3, 2009

தொழிலாளர்களுக்கு எதிரான நிர்வாகங்களின் செயற்பாடுகளை முறியடிக்க வேண்டும்

தோட்டக் கம்பனிகளுடன் தொழிற் சங்கங்கள் செய்து கொண்டுள்ள கூட்டுத் ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளின்படி தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வினை பெற்றுக் கொள்வதைத் தடுக்கும் சூழ்ச்சி வேலைகளில் தோட்ட நிர்வாகங்கள் ஈடுபடலாம். இதனை தொழிலாளர்களும், தொழிற்சங்களும் கூட்டாக இணைந்து முறியடிக்க வேண்டும் என லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனின் பொதுச் செயலாளரும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவருமான எஸ். இராமநாதன் அளவத்து கொடையச் சேர்ந்த விலான தோட்டத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு 405 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள சம்பளத்தை சகல தோட்ட நிர்வாகங்களும் வழங்குவதை ஊர்ஜிதப்படுத்துவதற்கான நடவடிக்கையை தொழில் அமைச்சர் எடுத்து வருகிறார்.
சம்பள உயர்வை வழங்கத் தீர்மானிக்கப்பட்ட பிறகு தோட்டத் தொழிலாளர்கள் செய்யும் வேலையின் அளவை அதிகரிப்பதற்கு சில நிர்வாகங்கள் முயன்று வருவதாகவும் புகார்கள் கிளம்பியுள்ளன. இப்படி அவர்களால் தன்னிச்சையாக செயற்பட முடியாது.
வழமையான வேலையில் எந்தவித மாற்றம் செய்வதானாலும் தோட்டத் தலைவர்களுடன் பேசி அதன் பிறகே ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டும். இந்த விடயம் கூட்டு ஒப்பந்தத்தில் தெளிவாக வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.
கொழுந்து பறிக்கும் அளவும், இறப்பர் பால் சேகரிக்கும் அளவும் கூட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் கடைபிடிக்கப்பட்டு வந்த அளவாகவே இருக்க வேண்டுமேயொழிய நிர்வாகங்களின் தன்னிச்சையான முடிவின்படி இதில் எவ்வித மாற்றமும் செய்வதற்கு தொழிலாளர்கள் எவ்வகையிலும் அனுமதிக்கக் கூடாது என்றார்.
அரசின் அபிவிருத்தித் திட்டங்களில் தோட்டப் பகுதிகள் உள்ளடக்கப்படுவதில்லையா?

அரசு நாட்டில் உள்ள 2-5 வயது வரையுள்ள பிள்ளைகளுக்கு ஒரு கிளாஸ் பசும்பால் திட்டம் கொண்டு வந்துள்ளது. இது எத்தனை தோட்டப் பிள்ளைகளுக்கு கிடைக்கின்றது? மகிந்த சிந்தனையின் கீழ் தாய்மாருக்கான போஷாக்கு பொதித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எத்தனை தோட்டப்புற தாய்மார்களுக்கு கிடைக்கின்றது. அது தவிர அரசாங்கத்தால் இலவசமாக பெற்றுத்தரப்படும் சமூக அபிவிருத்தி தொழில் விருத்தி சிறுவர் அபிவிருத்தி மற்றும் கலாச்சார நோக்கங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களும் அதற்கான அரச நிதிகளும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் கிடைத்து வருகின்றன. ஆனால் இவையெல்லாம் தோட்ட மக்களுக்கு கிடைக்கின்றனவா?
அப்படியானால் அரசாங்கம் தோட்ட மக்களை புறக்கணித்து செயற்படுகி;றதா? இல்லவே இல்லை என்கிறார் அம்பகமுவ பிரதேச செயலாளர் நாயகம் கே.பி. கருணாதிலக்க. அரசாங்கம் நாட்டு மக்களின் சேமநலனை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் அதற்கான நிதியுதவிகளையும் அளித்து வருகின்றது. தோட்ட மக்களும் இந்நாட்டின் மக்களே என்ற அடிப்படையில் அவர்களுக்கும் இவ் அபிவிருத்தித் திட்டங்களில் பங்கு கொண்டு பலன் பெற சகல உரிமையும் உண்டு. இன்னும் சொல்லப் போனால் தோட்டப் பகுதிக்கான சேவைகளை பெற்றுக் கொடுக்க பல்வேறு விசேட பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கான சேவைகளை அரசாங்கம் வழங்கி வருகின்றது. ஆயினும் இத் திட்டங்கள் தொடர்பாக இம் மக்கள் அறிந்திராமையும் இதனை உரிய வகையில் இம் மக்களிடத்தில் கொண்டு செல்வதற்குரிய முகவர்கள் தெளிவு பெற்றிருப்பதில்லை என்பதாலும் அரசின் இத்தகைய திட்டங்கள் இம் மக்களை சென்றடைவதில்லை. இவ் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக அரசின் பிரதிநிதிகளாகச் செயற்பட்டு வருகின்ற அரச ஊழியர்கள் கூட இத் திட்டங்கள் தொடர்பான பூரண அறிவை கொண்டிருப்பதில்லை. இவ்வாறான காரணங்களாலேயே அரசின் பல அபிவிருத்தித் திட்டங்கள் தோட்ட மக்களை சென்றடையவில்லை. இது ஒரு பாதகமான விடயமாகும் என அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாகவே அரசின் அபிவிருத்தி திட்டங்களில் எவ்வாறு பங்கு கொண்டு பலன் பெற முடியும் என்ற தெளிவினையும், அறிவினையும் தோட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் செயல் திட்டமொன்றை கெயர் சர்வதேசத்தினூடாக நாம் தற்போது முன்னெடுத்து வரும் திட்டத்திற்கிணங்க பல்வேறு தோட்டப் பிரதேசங்களிலும் இருந்து மற்றவர்களுக்கு தெளிவுப் படுத்தக் கூடிய திறனைக் கொண்டிருக்கின்ற ஆண், பெண் தொழிலாளர்கள் மற்றும் படித்த இளைஞர் யுவதிகளை தெரிவு செய்து அவர்களுக்கு அரசின் அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற அறிவினையும் பயிற்சியையும் வழங்கி வருவதாக இச் செயற்திட்டத்தின் இணைப்பாளர் விமன்சசொய்சா தெரிவித்துள்ளார்.
குறிஞ்சி குணா
நன்றி - சூரியகாந்தி

Friday, October 2, 2009

மலையகப் பகுதிகளில் கடும் மழை மண்சரிவு அபாயம்

நாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலையின் காரணமாக மலையப் பகுதிகளில் கடும் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே பாரிய மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. இதனால் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு ள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழையுடன் கடும் காற்றும் வீசுவதால், மின்சாரக் கம்பங்களும், தொலைத் தொடர்புக் கம்பங்களும் சரிந்து வீழ்ந்துள்ளன. ஹட்டன் வனராஜா பகுதியில் பாரிய கல்லொன்றும், மரமொன்றும் சரிந்துள்ளது. இதன்போது அந்த வழியால் சென்ற பால் வேனொன்று சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஹட்டன், வட்டவளை உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் வீதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி பகுதியில் சிறு மினிசூறாவளியால் பன்வில, கோம்பர, ஹேவாஹெட்டை, கண்டி, ஹாரிஸ்பத்துவ போன்ற பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. பிரமாண்டமான மாறா மரம் கண்டி பேராதனை வீதியில் கிங்ஸ்வூட் கல்லூரிக்கு முன்பாக உடைந்து வீழ்ந்ததால் தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. பாடசாலை முடிவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றதால் பாரிய விபரீதம் எதுவும் இடம்பெறவில்லை.
கண்டி கட்டுகஸ்தோட்டை வீதியில் வட்டாரந்தன்னையில் பாரிய மாமரம் ஒன்றும் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்துக்கள் சில மணி நேரம் தடைப்பட்டன.
இவ்வாறு பெய்யும் அடைமழையினால் மலையகத்தில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்படலாம் என தேசிய கட்டட நிர்மாண ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த பூகற்பவியல் அதிகாரி எம். எம். சி. டபிள்யூ. மொரேமட தெரிவித்தார். மண்சரிவுகள் குறிப்பாக சப்ரகமுவ, மத்திய ஆகிய பிரதேசங்களில் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் கடும் மழை, சூழல் காற்றினால் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இறக்குவானை பகுதிகளில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.
பெல்மதுளை வன்னியாராச்சி கிராமத்தில் நேற்று இடம்பெற்ற கடும் மழை, சூழல் காற்றினால் வீட்டுக் கூரை அள்ளுண்டு சென்றுள்ளது. இதேவேளை இறக்குவானை டெல்வீன் ஏ பிரிவில் மரமொன்று சரிந்து விழுந்ததால் தோட்டத் தொழிலாளியின் வீடு பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது. பல வீடுகளின் கூரைகள் சேதமடை ந்துள்ளன. இறக்குவானை பல பகுதிகளில் மின்வெட்டும் இடம் பெற்றுள்ளது.