Wednesday, October 17, 2018

மலையகத்தில் மேலும் மண்சரிவு அபாயம்

நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழை சில தினங்களுக்கு தொடரும் அதேநேரம் மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக நுவரெலியா, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை,கண்டி, மாத்தளை பகுதிகளில் தொடர்ந்தும் சுமார்100 முதல் 150 மில்லிமீற்றர் வரை கடும் மழை பெய்யுமென்றும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, மலையகத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் வாழும் மக்கள் இயலுமானவரை அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இப்பிரதேசத்திற்கூடாக பயணிக்கும் வாகன சாரதிகள் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் அவசர தேவைகளின் நிமித்தம் பிரதேச அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மத்திய , ஊவா, வடமத்திய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் 100 மில்லிமீற்றர் வரை கடும் மழை பெய்யுமென்றும் இக்காலப்பகுதியில் மின்னல் தாக்கம் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வயல்வெளிகள், மைதானங்கள்,குளங்கள், நீர் நிலைகள் போன்ற திறந்த வெளிகளில் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் மின்சார உபகரணங்களை கவனமாக கையாளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நன்றி- தினகரன்

No comments: