Saturday, October 22, 2016

தொழிலாளர்கள் போராட்டம்

தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீபாவளி முற்பணத்தை தோட்ட அதிகாரி கள் வழங்க மறுத்ததையடுத்து உடனடியாக தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரி  லிந்துலை தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நேற்று பிற்பகல் 2 மணிநேரம் சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஏனைய பிரதேசத்தில் உள்ள தோட்டங்களில் தீபாவளி முற்பணம் வழங்கியிருக்கின்ற போதிலும் இத் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. நேற்றுக்காலை தோட்ட தொழிற்சங்க தலைவர்களும் மற்றும் தொழிலாளர்கள் தோட்ட காரியாலயத்திற்கு சென்று தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரிய போது தோட்ட அதிகாரி வழங்க வேண்டிய தீபாவளி முற்பணம் கம்பனி வங்கியில் வைப்பு செய்யவில்லை எனவும், வைப்பு செய்தால் பணத்தை 24ஆம் திகதி தருவதாக கூறியதையடுத்து, தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களே இருப்பதால் 24ஆம் திகதி இப்பணத்தை பெற்று தங்களின் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு தீபாவளி பண்டிகைக்காக மாதாந்தம் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்து சேமித்து வைத்திருக்கும் தொகையினை கூட வழங்க தோட்ட நிர்வாகம் மறுத்துள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.
கூட்டு ஒப்பந்தத்தில் ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று தருவதாக கூறிய மலையக அரசியல் தலைவர்கள் தம்மை ஏமாற்றியதாக தெரிவித்த அவர்கள், கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுப்படும் தொழிற்சங்க அதிகாரிகள் காட்டி கொடுத்துவிட்டனர்.20ஆம் திகதி தீபாவளி முற்பணம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதாக தெரிவிக்கின்றனர்.
எனவே தோட்ட நிர்வாகமும், தொழிற்சங்க அதிகாரிகளும் தமக்கு தீபாவளி முற்பணத்தினையும், ஏனைய கொடுப்பனவுகளையும் உடனடியாக பெற்று தருமாறும், அவ்வாறு தவறும் பட்சத்தில் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்படப் போவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

No comments: