Wednesday, June 24, 2015

பெருந்தோட்ட இளைஞர்கள் இடைநிறுத்தம்- பெரும்பான்மை இனத்தவர்கள் நியமனம்

கண்டி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் அரச பெருந் தோட்டயாக்க நிர்வாகத்தின் கீழ் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகஸ்தர்களை இடைநிறுத்தி விட்டு, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள பணியில் ஈடுப்படுத்துவதை தான் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் அருள்சாமி தெரிவித்தார். 

மேலும், இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானுக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார். கண்டி மாவட்ட பெருந்தோட்டங்களில் தற்போது பரவலாக நிலவி வரும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டபோது அருள்சாமி, இதனை கூறினார். 'கடந்த 50, 60 வருடங்களாக பெருந்தோட்டங்களில் கடமையாற்றிய தோட்ட சேவையாளர்களை அதிரடியாக இடைநிறுத்திவிட்டு, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை வேலைக்கமர்த்துவது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல.

இது பெருந்தோட்டங்களில் கடமையாற்றும் சேவையாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்'. பெருந்தோட்டங்களில் கடமையாற்றும் 60 வயதை பூர்த்தி செய்த தோட்ட வெளிக்கள உத்தியோகஸ்தர்கள், ஜூன் மாதம் 15ஆம் திகதியுடன் பணிநீக்கம் செய்யப்படுவர் என்று, கண்டி மாவட்டத்திலுள்ள தோட்டங்களின் தலைவர்களால் கடந்த 8ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது' என்றும் அருள்சாமி கூறினார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அமைச்சரால் கண்டி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டத்துக்கு, வெளிமாவட்டங்களிலுள்ள தோட்ட சேவையாளர்கள் கடமைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களானது, பெருந்தோட்டங்களில் வெளிக்கள உத்தியோகஸ்தர்களாக கடமையாற்றும் இளைஞர், யுவதிகளுக்கு ஆப்பு வைக்கும் விடயமாக காணப்படுகின்றது என்றும் அருள்சாமி குறிப்பிட்டார்.

No comments: