Thursday, January 23, 2014

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகின்றார்கள்

மனித உரிமைகள் தொடர்பாக தற்போது அதிகமாக குரல் எழுப்பப்பட்டு வருகின்ற இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகின்றமை வருந்தத்தக்க விடயமாகுமென மலையக மக்கள் முன்னணியில் அரசியல் பிரிவுத் தலைவர் வி. இராதாகிருஷ்ணன் நுவரெலியாவில் பொது மக்களுடனனான சந்திப்பில் கலந்து கொண்ட போது தெரிவித்தார். 

அவர் அங்கு தெரிவிக்கையில் தோட்டத் தொழிலாளர்கள் உழைப்பின் சிகரமாக திகழ்கின்றார்கள். நாட்டுக்கு உரமூட்டுகிறார்கள.; இவர்களுக்கு நீண்டகால வரலாறு இருக்கின்ற போதும் இதில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிட வில்லை என்பது கசப்பான உண்மையாகும். தொழிலாளர்கள் குடியிருக்கும் லயன்கள் சுமார் 200 வருடத்துக்கும் அதிகமான வரலாற்றைக் கொண்டதாகும். இந்த வாழ்க்கை முறையை மாற்றியமைத்து தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக குரல் எழுப்பப்பட்டு வருகின்ற போதும் தனி வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பதில் இழுபறி நிலைகளே காணப்படுகின்றன.

தொழிலாளர்களின் பல துறைகளில் குறிப்பிடத்தக்க எழுச்சி ஏற்படவில்லை. இவர்களை ஏணியாக வைத்து பலர் முன்னேறி செல்கின்ற போதும் தொழிலாளர்கள் இருந்த இடத்திலேயே இருந்து வருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 

வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற உலகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தொழிலாளர்களின் வாழ்க்கை மாற்றியமைக்கப்பட வேண்டும். அவர்களின் கல்வி, கலை, கலாச்சாரம் விளையாட்டு போன்ற இன்னோரன்ன துறைகளின் அபிவிருத்தி கருதி நடைமுறைச்சாத்தியமான திட்டங்களை வகுத்து முன்னெடுக்க வேண்டும்.

இலங்கையில் பல்லின மக்கள் வாழ்கின்றார்கள். இவர்களின் பிரச்சினைகள் மாறுபட்ட தன்மை கொண்டவை மலையக மக்களுக்கும் தனித்துவமான பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகின்றன. இவற்றை தீர்ப்பதற்கு அரசு ஆர்வம் காட்ட வேண்டும். இதேவேளை மலையக தலைமைகள் அரசுக்கு உரிய அழுத்தத்தை கொடுத்து மலையக மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும். 

No comments: