Tuesday, May 5, 2009

தோட்டத் தொழிலாளர ஒரு நாள் சம்பளத்தை வசூலிப்பது யுத்தத்தை ஆதரிக்கும் செயல் -பெ.சந்திரசேகரன்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தோட்டத் தொழிலாளர்களின் ஆகக் குறைந்த ஊதியத்தில் ஒரு நாள் சம்பளத்தை வசூலிக்க முயற்சிப்பது யுத்தத்துக்குத் துணை போவதாகவே அமையுமென அமைச்சர் பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் யுத்தத்தினால் அகதிகளாக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக என்று கூறி மலையக தோட்டத் தொழிலாளர்களிடம் ஒரு நாள் சம்பளத்தினைச் சேகரித்து வழங்குமாறு சில தொழிற்சங்கங்கள் நிர்வாகங்களிடம் கேட்டுள்ளன. அத்துடன் தொண்டு நிறுவனங்கள் பலவும் தோட்டத் தொழிலாளர்களிடம் பொருட்களையும் பணத்தையும் சேகரிக்க எத்தனிப்பதாக தெரிவிக்கப் படுகின்றது. பாரிய ஏவுகணைத் தாக்குதல்களினாலும் விமான குண்டு வீச்சுகளினாலும் அப்பாவிப் பொதுமக்களுக்குப் பல விதமான இழப்புகள் ஏற்படுமென உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கண்டனங்களை உதாசீனப்படுத்திக் கொண்டிருப்பதால்தான் பல இலட்சக்கணக்கானவர்கள் தமது சொந்த இருப்பிடங்களையும் வாழ்வையும் சொத்துகளையும் இழந்து அங்கவீனமடைந்த நிலையில் அகதிமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீதுமனிதாபிமானத்தோடு அனுதாபம் காட்டுவதற்கும் எவரோவிட்ட தவறுக்காக நட்ட ஈட்டினைத் தோட்டத் தொழிலாளர்களை செலுத்த நிர்ப்பந்திப்பதற்கும் வேறுபாடுள்ளது என்பதனை மலையக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மலையகத் தோட்டத்தொழிலாளர்களிடம் பணமும் பொருட்களும் சேகரிக்க எத்தனிப்பவர்கள் முதலில் இதனை மலையகத்துக்கு வெளியே நடைமுறைப்படுத்திக் காட்டுவார்களா? ஏன்று கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக அக்கறை செலுத்தும் தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வுக்கு உள பூர்வமாக செயற்படாமல் தோட்டத்தொழிலாளர்களிடம் மேலதிகமாக பணத்தினை பறிக்க நினைப்பது ஜீரணிக்கமுடியாத அவலமாகும் என்றார்.

No comments: