Saturday, October 24, 2009

மலையகப் பாடசாலைகளில் 'சுகாதாரமும் போஷாக்கும்” வேலைத்திட்டம்

பெருந்தோட்டப் பகுதிப் பாடசாலைகளில் சுகாதாரமும் போஷாக்கும் என்ற தலைப்பில் வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்த கல்வி அமைச்சு முன்வந்துள்ளது. அண்மையில் கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து மேற்கொண்ட ஓர் ஆய்வின் அடிப்படையில் நாட்டிலுள்ள அனேக மாணவர்கள் குறிப்பாக மலையகப் பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் போஷாக்கின்மை காரணமாகவே கல்வித்துறையில் பின்னடைந்து காணப்படுவது தெரிவந்துள்ளது. அதே நேரம் நகரச்சூழல்களில் உள்ள பலர் அதிபோஷாக்கு காரணமாக உடல் உள நிலை பாதிக்கப்பட்டு துன்பப்படுவதாகவும் இனம் காணப்பட்டிருந்தனர்.
இதன் அடிப்படையில் நாட்டிலுள்ள 101 ஆசிரிய மத்திய நிலையங்களுக்கூடாக ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டு, பாடசாலைகள் தோறும் சுகாதாரக் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். அவர்கள் மூலமாக பல்வேறு சுகாதார செயற்திட்டங்களை மேற்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அண்மையில் வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள தமிழ்மொழிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வலய ஆசிரியர் மத்திய நிலையத்தில் செயலமர்வுகள் இடம்பெற்றன. இதில் தத்தமது பிரதேசத்திற்கு ஏற்றவாறு போஷாக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது, மாணவர்களுக்கான போஷாக்கு மற்றும் சுகாதாரப் பழக்க வழக்கங்களை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பன போன்ற செய்முறைப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன

No comments: