Sunday, August 30, 2009

தோட்ட சேவையாளர்களுக்கு காணி கிடைக்குமா?

பெருந்தோட்ட சேவையாளர்கள் நீண்ட காலங்களாக பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்ற பின்னர் அவர்கள் தமக்கென ஒரு வீட்டை அமைத்துக் கொள்வதற்கு தேவையான காணியை பெற்றுக்கொடுக்க ஆவண செய்யுமாறு இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத் தலைவர் பி. இராமசிவம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
பெருந்தோட்ட சேவையாளர்கள் தோட்டங்களில் பணிபுரியும் காலப்பகுதியில் வசிக்கும் வீடுகளை ஓய்வுபெற்றுச் செல்லும்போது தோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டு ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பபிக்கை நிதியம், சேவைக்காலப் பணம் என மிஞ்சும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அத்தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அவர்கள் பணிபுரிந்த காலப்பகுதியில் பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையில் தமது நிரந்தரக் குடியிருப்பு, பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் எதுவும் இருப்பதில்லை. ஓய்வுபெற்றுச் செல்லும் காலம் நெருங்கும் போதுதான் சொந்த வீடு, காணி, இருப்பு பற்றிய சுய சிந்தனை எழுகிறது. தோட்டத்திலிருந்து வெளியேறிச் செல்வோரில் சிலர் தமது வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்லும் அதேவேளை பெரும்பாலானோர் வாடகை வீடுகளில் இறுதிக்காலத்தை கழிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தோட்ட சேவையாளர்களுக்கென சிறு துண்டு காணியை ஒதுக்கித் தருமாறு இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் அரசாங்கங்களிடமும், தோட்டக் கம்பனிகளிடமும் விடுக்கும் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில்கள் கிடைத்தாலும், இறுதியில் அவை வெற்றியளிக்காத நிலையே தொடர்கிறது.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர், பொதுச் செயலாளர் நாத் அமரசிங்க உட்பட அச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பெருந்தோட்டத் தொழில் அமைச்சர் டி எம். ஜயரட்னவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். சங்கத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து தேவையான நடவடிடக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்தார். எனினும் இந்நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்த போதிலும் இதுவரை காணி வழங்கப்படாமல் இருக்கிறது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை நேடியாக சந்தித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை, வழங்குமாறும் ஜனாதிபதி இவ்விடயத்தில் தலையிட்டு மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் தோட்ட சேவையாளர்களுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாவலப்பிட்டி
டி.வி. குமார்

No comments: