Saturday, September 13, 2008

மலையக மக்களைப் பாதிக்கும் தேசிய அடையாள அட்டைப் பிரச்சினை

மலையக மக்களுக்கு வாக்குரிமை இருந்தும்; அவர்களில் கணிசமானோர் அந்த உரிமையைத் தேர்தல்களில் பயன்படுத்த இயலாதவர்களாக உள்ளனர். தேசிய அடையாள அட்டை இல்லாமையே இதற்குப் பிரதான காரணம். நடந்து முடிந்த வட மத்திய, சப்ரகமுக மாகாணசபை தேர்தலில் வாக்களிப்பதற்குத் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அடையாள அட்டையைக் கட்டாயமாக்கும் நிபந்தனையை நீக்குமாறு கோரிக்கை விடுப்பது இதற்குப் பரிகாரமாகாது. வருடத்திற்கொருமுறை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதை பெருந்தோட்ட மக்களோ அல்லது அம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைத்துவங்களோ இதில் அக்கறை காட்டவேண்டும். இதற்காக குறைந்தது வருடத்தில் ஐந்து நாட்களை ஒதுக்கினாலே போதும் இம் மக்களில் பெரும்;பாலானோர் வாக்களிக்க தகுதியுடையவர்களாக ஆக்கப்படுவார்கள். பிரசாவுரிமை வாக்குரிமை இருந்தால் மட்டும் போதாது. அவற்றின் பலனை அனுபவிக்கவும் அதனை சரிவர பயன்படுத்தவும் அந்த மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அம் மக்களினதும் சமூகப் பிரதிநிதிகளை சார்ந்த விடயமாகும்.

இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம்

இறப்பர் பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் மழை காலங்களில் தங்கள் இறப்பர் பால் வெட்டும் தொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளனர். கடந்த சில வாரங்களாக இரத்தினபுரி போன்ற பகுதிகளில் கடுமையான மழை காரணமாக அப்பகுதி தொழிலாளர்களுக்கு தோட்டக் கம்பனிகள் வேலை வழங்காததால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர். அது மட்டுமல்ல கூட்டு ஒப்பந்தத்தின்படி மாதத்தில் 25 நாட்கள் வேலைக்கு சென்றால் மாத்திரமே அவர்களுக்கான முழுமையான நாட்சம்பளம் கிடைக்கும் இவர்களுக்கு வேலை வழங்கப்படாவிட்டால் அடிப்படையில் சம்பளம் குறைக்கப்படுகின்றது. எனவே தோட்டக் கம்பனிகளுடன், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு இம் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Friday, September 12, 2008

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு சுயதொழில் வாய்ப்பு வழங்க வேண்டும்

பெருந் தோட்டங்களில் ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு அவர்கள் வாழும் தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களில் விவசாயம் , கால்நடை, கோழி வளர்ப்புக்கும் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என விவசாய தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமி மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவை சந்தித்து தொழிலாளர்கள் எதிர்நோக்கும் தொழில், கல்வி, சமூக பொருளாதார விடயங்கள் குறித்து பேசுகையிலேயே இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
பெருந்தோட்டங்களில் மூடப்பட்டுள்ள தேயிலை தொழிற்சாலைகளை தொழிற்பயிற்சி நிலையங்களாக மாற்றியமைக்கவும், அதனூடாக படித்துவிட்டு வேலையற்று இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் கிராமப்புற, நகர்புற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகள் மற்றும் இதர வசதிகள் கிடைப்பது போன்று தோட்டப்பகுதி முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றார்.


மின்மாற்றி குண்டு வைத்து தகர்ப்பு

நுவரெலியா மாவட்டம் தலவாக்கொல்லை நகருக்கு அண்மையில் தெவசிறிபுர என்ற இடத்தில் மின்மாற்றி குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் 11-09-2008 இரவு 9.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்னரும் இவ்வாறான வெடிப்பு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இதேவேளை இப் பிரதேசங்களில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மலையக இளைஞர்கள் பலர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்டத்துறை மக்களின் பொருளாதார நெருக்கடி

தற்போது அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்படும் மக்களில் பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் அதிகமாக கொள்வனவு செய்யும் கோதுமை மா, மண்ணெண்ணெய் , இதர அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் மிகுந்த நெருக்கடிகளுக்கும் கஷ்டங்களுக்கும் ஆளாகியுள்ளனர். பிரதான காரணம் இவர்கள் அன்றாட வேதனத்தை நம்பியே வாழ்கின்றனர். சாதாரணமாக அன்றாட கூலித் தொழில் செய்பவர் 600-1000 ரூபாவரை ஒரு நாள் சம்பளமாக பெறுகிறார். தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 290 ரூபாவையே பெறுகின்றனர். தற்போதைய பொருள் விலையேற்றங்களுக்கு ஏற்ப நிவாரணம், சம்பள உயர்வு எதுவும் கிடைப்பதில்லை. வருடா வருடம் சமர்ப்பிக்கப்படும் வரவு-செலவு திட்டங்களில் இம் மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் எதிர்பார்க்கும் மக்களுக்கு ஏமாற்றமே. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினை பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் போது வாழ்க்கை செலவு புள்ளி உயர்வுக்கான கொடுப்பனவையும் சேர்த்துக்கொள்ளுமாறு தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thursday, September 11, 2008

வீடில்லாப் பிரச்சினைக்குதீர்வு காணும் திட்டம்

மக்கனின் வீடில்லாப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் பாரியதொரு திட்டத்தை ஆரம்பித்துள்ளது. நாடு முழுவதிலும் 2009ம் ஆண்டில் 21,000 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வீடில்லாப் பிரச்சினையினால் நீண்ட காலமாக அல்லலுறுகின்ற பல்லாயிரம் குடும்பங்கனின் துயரைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்தின் இத்திட்டம் பெரிதும் உதவுமென எதிர்பார்க்கலாம்.

நாடெங்கும் அமைக்கப்பட்டுள்ள 21,000; வீடுகளில் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகனில் 3,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2009ம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தின்போது மேற்படி வீடமைப்புக்கென நிதி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ் வீடமைப்பானது மலையக மக்களைப் பொறுத்தவரை பெரும் வரப்பிரசாதமென்றே கூற வேண்டும். பரம்பரை பரம்பரையாக ‘லயன்கள்’ என அழைக்கப்படும் வரிசை வீடுகனில் அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் மக்கள் பலர் இவ்வீடமைப்புத் திட்டத்தினால் பெரும் நன்மையடையப் போகின்றனரென்பது உண்மை. வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மானிகையில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பதுளையில் 13 பேர் கைது

பதுளையில் கடந்த 08-09-2008 மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 13 பேர் கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் தலைமறைவாக இருந்த பாதுகாப்பு படையினர் ஒருவரும் அடங்குகிறார். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தமிழர்கள் எனினும் அவர்களிடம் தம்மை அடையாளப்படுத்தக் கூடிய ஆவணங்கள் இருக்கவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர்

தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையில் வாழ்க்கை செலவு புள்ளி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தைகளின் போது அவர்களின் சம்பள உயர்வுடன் வாழ்க்கை செலவு புள்ளி உயர்வுக்கான கொடுப்பனவையும் சேர்த்துக் கொள்ளுமாறு தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மூலம் வலியுறுத்த இருப்பதாக லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனின் பொதுச்செயலாளரும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவருமான எஸ் இராமநாதன் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தோட்டத் தொழிலாளரை வெகுவாக பாதித்துள்ளது. அவற்றை சமாளிக்க தொழிலாளர்களின் சம்பள முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டியதோடு வாழ்க்கைச் செலவு புள்ளி உயர்வுக்கான கொடுப்பனவையும் இதில் உள்ளடக்க வேண்டும் என்றார்.

கூட்டு ஒப்பந்தத்தினால் தொழிலாளர்களுக்கு அநீதி – ரி. சென்னன்

தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினையில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் ரி. சென்னன் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினைக்கு தீர்வு காண சகல தரப்பினரும் அழுத்தம் கொடுக்க வேண்டும்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண உழைக்கும் மக்களும் சிவில் சமூக அமைப்புக்களும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாணசபை அமைக்கப்பட்டும் இன்னும் இடம்பெயர்ந்தவர்களுக்கு பூரண நிவாரணம் கிடைக்கவில்லை. இந் நிலையில் வன்னியில் இரண்டு லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு ஆயிரக்கணக்கில் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். யுத்தத்தின் மூலம் எந்த தரப்பு வெற்றி பெற்றாலும் பிரச்சினைக்கு முற்று முழுதாகத் தீர்வு காண முடியாது. தற்போது நடைபெறும் யுத்தம் வெளிநாடுகளுக்கிடையில் இடம்பெறுவதல்ல. மாறாக சகோதர்களுக்கிடையில் இடம் பெறும் மோதலை தவிர்க்கவும் சரியான தீர்வை காணவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.