Tuesday, September 23, 2008

மலையக மக்களின் பிரச்சினை பிரஜாவுரிமை பிரச்சினையாவே பார்க்கப்பட்டது அல்லது மட்டுப்படுத்தப்பட்டது.

1948ம் ஆண்டு மலையக மக்களின் நாட்டுரிமை பறிக்கப்பட்டதன் விளைவாக 1977ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் 30 ஆண்டுகள், எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாதொழிக்கப்பட்டது. அதன் பின் எமது மக்களினதும், தலைவர்களினதும் முழு சக்தியும் பிரஜாவுரிமையை மீளப் பெறுவதிலேயே கழிந்தது. இதய சுத்தியோடு சில போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் அதன் பிறகு மலையக மக்களின் பிரச்சினையை 2003ம் ஆண்டு பராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமை சட்டம் வரை எமது பிரச்சினை பிரஜாவுரிமை பிரச்சினை போன்றே பார்க்கப்பட்டது. எமது தேசிய இன அடையாளத்தையும், தேசிய இன உரிமையையும் நிலை நாட்டுவதன் மூலம் எமது பிரஜாவுரிமை உட்பட எமது சகல உரிமைகளையும் இந்த நாட்டின் ஏனைய இனங்களுக்கும் உள்ளது போல் நிலை நாட்டப்பட வேண்டுமென்ற தொலை நோக்குப் பார்வையில் எமது பிரச்சினை பார்க்கப்படவில்லை.

தேசிய கட்சிகளான ஐ.தே.க வாக இருந்தாலும் ஸ்ரீ.ல.சு.க ஆக இருந்தாலும் இந்த மக்களின் வாக்கு வங்கியை எப்படி தமது ஆட்சியதிகாரத்திற்கும், இருப்பிற்கும் பயன்படுத்திக் கொள்வது என்றே பார்க்கப்பட்டது. திமபு பேச்சுவார்த்தையில் தமிழ் இயக்கங்களின் பிரஜாவுரிமை தொடர்பான வலியுறுத்தல் மிக காத்திரமான பங்களிப்பைச் செய்தது. பௌத்த பிக்குகளும், சிங்கள இனவாத அமைப்புக்களும் இந்தியா போன்ற வல்லரசொன்று எமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதற்காக இந்த பிரஜாவுரிமை விடயத்தில் ஆதரவு நல்கின.

ஆகவே மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை ஒவ்வொரு கட்சியினதும் நலம் சார்ந்த பிரச்சினையாகவும், அவர்களது வாக்கு வங்கியை குறிக்கோளாக கொண்டதாகவும் அமைந்ததே அல்லாமல் மலையக தமிழ் மக்களின் பிரச்சினையை நீண்டகால நோக்கில், முழுமையாக தீர்க்க வேண்டுமென்ற அடிப்படையில் பார்க்கப்படவில்லை. எனவே எமது தலைவர்கள் உட்பட தேசிய கட்சிகள் வரை எமது மக்களின் பிரச்சினையை ஒரு பிரஜாவுரிமை பிரச்சினையோடு சகல உரிமைகளும் வழங்கப்பட்டு மற்ற இனங்களைப் போல தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட வேண்டுமென்ற அபிலாசையோடு பார்க்கப்படவில்லை

-சமகால அரசியல் - தீர்வு – அ. லோறன்ஸ் -

உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகள் தோட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்

உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகளை பெருந்தோட்டப் புறங்களுக்கும் முன்னெடுக்கப்பட கூடியதாக சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரின் பாரியார் புசல்லாவ நியூபீகொக் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்புக்களை பார்வையிடும் போது மக்கள் மத்தியில் தெரிவித்தார். மேலும் வடக்கு கிழக்குடன் ஒப்பிடும் போது அச்சமற்ற சூழலில் வாழக்கூடிய நிலையில் நாம் இருக்கின்றோம். உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகள் தோட்டப்புறங்களுக்கு சென்றடைவதில்லை. இதனால் பிரதிநிதிகளை தெரிவு செய்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அறிவூட்டல் நிகழ்வில் 500 பேர் பங்கேற்பு

தோட்டத் தொழிலாளர்களின் அடையாள அட்டையை பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாத தடையை நிவர்த்தி செய்யும் பொருட்டு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தினால் கண்டியிலும், மாத்தளையிலும் நடத்தப்பட்ட அறிவூட்டல் நிகழ்ச்சியில் ஐநூறுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வு மாத்தளை பிரதேச செயலகம், ரொக்சைட் தோட்ட மண்டபம், கண்டி குருதெனிய கல்வி வள நிலையம், லொவர் கொத்மலை கிளப் ஆகிய இடங்களில் இடம் பெற்ற இந் நிகழ்வில் தோட்ட முகாமையாளர்கள், தோட்ட சமூக நல அதிகாரிகள், தோட்ட மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். பிறப்பு சான்றிதழ் பிரச்சினை சம்பந்தமாக ஜனாதிபதிக்கும் சமூக அபிவிருத்தி, இளைஞர் வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருக்குமிடையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கமைய மனித வள அபிவிருத்தி நிதியம் இதனை முன்னெடுத்துள்ளது.

No comments: