Saturday, July 4, 2009

சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் இணக்கமில்லை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தொழிற் சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையில் 03-07-2009 முதலாளிமார் சம்மேளன கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் எதுவும் எட்டப்படவில்லை.
இப் பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்,தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியன கலந்துகொண்டன. இப் பேச்சுவார்த்தையின் போது இன்றைய வாழ்க்கை சுமைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் 500 ரூபா நாட்சம்பளம் வழங்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்கள் கூட்டாக முதலாளிமார் சம்மேளனத்திடம் வலியுறுத்தின. எனினும், இதற்கு இணங்க மறுத்த முதலாளிமார் சம்மேளனம், வருடத்திற்கு பன்னிரண்டரை வீத சம்பள அதிகரிப்பு வழங்க முன்வைத்த யோசனையை முழுமையாக நிராகரித்த தொழிற்சங்கங்கள், இது சம்பந்தமாக தத்தமது தொழிற்சங்கங்களோடு கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஒரு பொது கூட்டு நடவடிக்கையொன்றை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
முகாம்களிலுள்ள மலையக மக்கள் உறவினர்களிடம் செல்ல அனுமதிக்க கோரிக்கை


வடக்கில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வாழுகின்ற இந்திய வம்சாவளி மக்களை மலையகத்திலுள்ள அவர்களது உறவினர்களின் இருப்பிடங்களுக்குச் செல்ல அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணி சர்வ கட்சிகளின் பிரதிநிதிகளின் சந்திப்பின் போது முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் ஜனாதிபதியை சந்தித்த போது கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் 25 வருடங்களுக்கு முன்பு மலையகத்திலிருந்து வடக்கிற்கு இடம்பெயர்ந்த இந்திய வம்சாவளித் தமிழ் மக்களும் இன்று அகதிகளாக உள்ளனர். இவர்கள் விரும்பும் பட்சத்தில் இவர்களை மலையகப் பகுதிகளில் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன், வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கும் நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை காணுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதியை கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீர்க்கமான முடிவு இன்றேல் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு விடயத்தில் தீர்க்கமான முடிவு கிடைக்காததால் தொழிலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராகிவருதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை பொறுமை காத்து வந்த தொழிலாளர்கள் பெருந்தோட்டக் கம்பனிகளினதும், கூட்டு ஒப்பந்த தொழிற் சங்கங்களினதும் அலட்சியப் போக்கை கண்டித்து பல்வேறு வகையான தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமீளாய்வு பேச்சுவார்த்தையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு கோரி தோட்டத் தொழிலாளர்களை அணிதிரட்டி தோட்டக் கம்பனிகளுக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்லாமல் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களை அம்பலப்படுத்த வேண்டிய நிலைக்கும் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி தள்ளப்பட்டுள்ளது என்றார்
சம்பள மீளாய்வு தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பாக இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்களை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்ற தரப்புகள் வெளியிட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் விஜயகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுவரை தோட்ட முதலாளிமார் சம்மேளனங்களும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் விபரங்கள் குறித்து முறையாக அறிவிக்காமையானது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களுக்கிடையில் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, ஊவா மாகாணசபைத் தேர்தலைக் காரணம் காட்டி சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் காலதாமதமாக்கப்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர் சார்பாக செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

Thursday, July 2, 2009

மவுசாகலை நீர்த்தேக்கம் திறக்கப்படும் நிலை

கடந்த சில தினங்களாகத் தொடராகப் பெய்துவரும் மழை காரணமாக மவுசாகலை நீர்த்தேக்கம் எந்தவேளையிலும் நிரம்பி வழியக் கூடிய கட்டத்தை அடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கே. டி. ஏக்கநாயக்கா தெரிவித்தார். இதனால் இந்நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் எந்த வேளையும் திறந்து விடப்படலாம். அதனால் களனி கங்கைக்கு இரு மருங்கிலும் அமைந்திருக்கும் கித்துல்கல, யட்டியந்தொட்டை, அவிசாவளை, ஹங்வெல்ல போன்ற பிரதேசங்களில் வாழும் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும் என குறிப்பிட்டார்.
மலையகத்தில் 24 மணி நேர எச்சரிக்கை

மலையத்தில் இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய நான்கு நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவுத் தலைவர் ஆர். எம். எஸ். பண்டார தெரிவித்தார். நேற்று இரண்டாவது நாளாகவும் 24 மணி நேர முன்னெச்சரிக்கையை விடுத்தது. இந்த நான்கு மாவட்டங்களிலும் 100மி.மீட்டருக்கும் மேலாகத் தொடராக மழை பெய்திருப்பதுடன் தொடர்ந்தும் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் அறிவித்திருக்கிறது. மணிசரிவு அச்சுறுத்தல்மிக்க இடங்களாக ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்கள் இந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத்த, பெல்மடுல்ல, இரத்தினபுரி, எஹலியகொட, கலவான, கஹவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை, புளத்ஹோபிட்டிய, தெரணியாகல ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளிலும்,நுவரெலிய மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலகப் பகுதியிலும், கினிக்கத்தேன, நோட்டன் பிரிட்ஜ், கெனியன், லக்ஷபான, மஸ்கெலியா பிரதேசங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, அகலவத்த, மத்துகம பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் மிக்க பல இடங்கள் உள்ளன.அவை ஏற்கனவே மணிசரிவு அச்சுறுத்தல்மிக்க இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
லயன்கள் எரிந்து நாசம்

வலப்பனை ‘பெப் ஸ்பேல்’ தோட்டத்தின் தியனில்ல கீழ் பிரிவிலுள்ள பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் தியனில்ல கீழ் பிரிவிலுள்ள 17ம் இலக்க லயனில் ஏற்பட்ட தீ விபத்தினால் லயன் அறைகள் எரிந்து சாம்பராகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன தெரிவித்தார். இச்சம்பவத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் நிர்க்கதியான நிலையில் அங்குள்ள விகாரையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள போதிலும்,இச் சம்பவம் காரணமாக உயிரிழப்புக்களோ காயங்களோ ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சமைத்த உணவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இச் சம்பவத்திற்கு லயன் அறையொன்றில் எரிந்து கொண்டிருந்த விளக்கிலிருந்து தீ பரவியதே காரணம் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.