Saturday, December 6, 2008

பொது வசதிகளுக்காக காத்திருக்கும் பெருந்தோட்ட மக்கள்

நீறுபூத்த நெருப்பில் ஊதி ஊதித்தான் பயன்பெற வேண்டும் என்றால் அது மலையகத்தை பொறுத்தவரையில் ஊதியம் பயனற்ற செயல்.

அபிவிருத்தி என்ற ஒன்றோடு ஏனைய பிரதேசங்களையும் மலையகத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். கல்வியிலே ஏனைய பிரதேசங்களையும் மலையகத்தையும் ஒப்பிட்டு பாருங்கள் அனைத்திலும் பின்தங்கியே உள்ளது. பொது வசதிகள் என்கிற போது எதனை என்று கேள்வி எழுப்பலாம்.

தோட்டத்துக்கு தோட்டம் தேயிலை செடி உண்டு. மரத்துக்கு மரம் ஆலயங்கள் உண்டு ஆனால் தோட்டப் பகுதிகளில் பின்வரும் பொது வசதிகள் இல்லையே.
• தரமான வைத்தியசாலை.
• நூலக வசதி
• தபால் நிலையம்
• கலாச்சார மண்டபம்.
• கணினி நிலையங்கள்
• விளையாட்டு மைதானம்

இவை அனைத்தையும் அமைத்துத் தருவதாக தேர்தல் காலங்களில் பல்லவி பாடுபவர்கள் தேர்தலின் பின்னர் தோட்டப் பகுதி வீதிகளை மட்டும் புனரமைத்து கொடுத்து விட்டு மக்களின் வாயை அடைத்து விடுகின்றனர்.

அடிப்படை வசதிகளற்று காணப்படும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் எதிர்கால மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. காரணம் நூலக வசதிகளை பொறுத்த வரையில் நகரங்களில் மட்டுமே காணப்படுகிறது. தோட்டப்புற பாடசாலைகளில் நூலகம் காணப்பட்டாலும் அவ்வளவு தரமான நூல்கள் கிடைப்பதில்லை. அதைவிட ‘வாசிப்பே ஒரு மனிதனை பூரணப்படுத்தும்’ மலையக மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க தோட்ட வாரியாக நூலக வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

அமெரிக்காவில் பகல் என்றால் இலங்கையில் இருட்டு என்பர். அது போல கொழும்பிலே விடிவு மலையகத்தில் இருட்டு காரணம் கொழும்பு போன்ற நகரங்களில் காணப்படும் கணனி கல்விக்கும் பெருந்தோட்ட கணனி கல்விக்கும் பெருந்தோட்ட கணனி கல்விக்கும் பாரிய இடைவெளி உண்டு. தேர்ச்சிப் பெற்ற கணனி ஆசிரியர்கள் மலையகத்தைப் பொறுத்தவரையில் கிடைப்பது அரிது. அதைவிட பாடசாலைகளில் கணனி பாடங்கள் இடம் பெற்றாலும் அது அடிப்படை கணனி அறிவோடு நிறுத்தப்படுகிறது. ஆசிரியர்களுக்கு போதுமான வினக்கம் இன்னும் வழங்கப்படவில்லை. முதலில் குறிப்பாக பெருந்தோட்ட ஆசிரியர்கள் பலருக்கு ஆங்கிலத்தையும் கணனியையும் கற்பிக்க வேண்டும். பிறகுதான் மாணவர்களை பற்றி யோசிக்க முடியும்.

கணனி நிலையங்களை அமைத்து தரமான ஆசிரியர்களை உள்வாங்குவதன் மூலம் மலையக மாணவர்களும் கணனித் துறையில் பிரவேசிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.
விளையாட்டு மைதானம்

தோட்டப்பகுதிகளிலும், தோட்டப்பகுதி பாடசாலைகளிலும் சரி தரமான விளையாட்டு மைதானங்களை காண்பது அரிது. காரணம் இடப்பற்றாக்குறை என்பர். தரிசு நிலங்கள் தரிசாகவே காணப்பட வேளாண்மை நிலையங்களுக்கு அருகாமையில் மைதானம் அமைக்க எம்மவர்கள் கேட்க இறுதியில் விளையாட்டு மைதானமும் இல்லை. தரிசு நிலத்தின் பயன்பாடும் இல்லாமல் போய் விடும்.

மலையக சமுதாயத்தில் அதிகரித்த திறமை உடையோர் இருக்க எட்டடி காம்பிரவுக்குள் எதனை அவர்கள் ஒத்திகை பார்ப்பர். பாடுபவரா? ஆடுபவரா, நடிக்கத் தெரிந்தவரா? அனைத்து திறமையுமே மழுங்கடிக்கப்படுகின்றன. திறமைகளை வெளிக்கொண்டு வர நினைக்கும் கலைஞனுக்கு பாடசாலையை தவிர வேறு எந்த வழியும் இல்லை. அதற்கு கலாச்சார மண்டபம் இன்மையும் ஒரு காரணமே.

தோட்ட வைத்தியசாலைகள் அரசால் பொறுப்பேற்கப்படும் என்ற வாசகம். தோட்ட வைத்தியசாலைகளின் அடிப்படை தேவைகள் கூட இன்னும் நிவர்த்தி செய்யப்பட வில்லை. இவ்வாறு பல பொது வசதிகள் தோட்டப் பகுதிகளில் மட்டும் உருவாக்கப்படாமைக்கு காரணம் என்ன? அமைச்சுக்கள் உண்டு, அரச சார்பற்ற நிறுவனஙகள் உண்டு. மலையகத்திற்கு என்றால் பணம் பதுங்கி விடுமோ?

குமுறப் போகும் எரிமலையாய் கொதித்து நிற்கும் தோட்டப்பகுதி மேலும் மேலும் இக்கட்டான திசைக்கே இட்டுச் செல்லப்படுகின்றது- வீரகேசரியிலிருந்து
ஜனவசம தோட்டங்களில் தொழில் பிணக்குகளுக்கு தீர்வு எட்டப்படுவதில்லை

ஜனதா தோட்ட அபிவிருத்தி சபைக்கு உரித்தான (ஜனவசம) தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக நிலவி வரும் தொழில் பிணக்குகளுக்கும், அவர்களது அடிப்படை தேவைகளுக்கும் உரிய காலத்தில் தீர்வு எட்டப்படுவதில்லை. எனினும் இவர்கள் தலைமுறை தலைமுறையாக இதே தோட்டங்களில் வாழ்ந்து தொழில் செய்தும் இவர்கள் ஓய்வுபெறும் போது இவர்களுக்கு சேர வேண்டிய ஊழியர் சேலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்கால பணம் என்பவைகூட முறையாக வழங்கப்படுவதில்லை. இது குறித்து இ.தொ.கா தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட வைத்தியசாலைகளுக்கு எம்.பி.பி.எஸ் நியமனம்- சுரேஷ்

அரசினால் பொறுப்பேற்கப்பட்ட பெருந்தோட்ட வைத்தியசாலைகளுக்கு எம்.பி.பி.எஸ் தரத்திலான வைத்தியர்கள் வெக விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் பெருந்தோட்டப் பகுதிகளில் பாரிய சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகவும், அதனடிப்படையில் தோட்ட வைத்தியசாலைகளுக்கு தமிழ் மொழியில் பரிச்சயமுள்ள நியமனங்கள் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சம்பள அதிகரிப்பு வழங்காவிடில் வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்பதில்லை-ம.ம.மு

தோட்டத்தொழிலாளரின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் உத்தரவாதமளிக்காத பட்சத்தில் திங்கட்கிழமை இடம்பெறவிருக்கும் வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பை பகிஷ்கரிப்பதென மலையக மக்கள் முன்னணி 03-12-2008 மத்திய குழு கொழும்பில் கூடி நீண்ட நேரம் கலந்துரையாடியதன் பின்னரே இந்த முடிவை எடுக்கத் தீர்மானித்துள்ளது.
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அவசர கவனமெடுக்கும் பொறுப்பும் கடப்பாடும் அரசாங்கத்துக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களுக்கும் உள்ளது. இதிலிருந்து அவர்களால் விலகிநிற்க முடியாது. இவ்விடயம் தொடர்பாக இன்று சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவிக்க மத்திய குழு தீர்மானித்துள்ளது.

Wednesday, November 26, 2008



மண் சரிவால் மூன்று வீடுகள் முற்றாக சேதம்

மலையகத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழையைத் தொடர்ந்து கொட்டகலை அமைதிபுர பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவினால் மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. மேற்படி வீடுகளில் வசித்து வந்தோர் தற்போது உறவினர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களில் 6 குழந்தைகளும் உள்ளடங்குவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இம் மண்சரிவினால் சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது

தோட்ட வைத்தியசாலை அரசாங்கத்தின் பொறுப்பில்

பதுளை மாவட்டம் உடுவர பெருந்தோட்டப் பகுதியைச் சார்ந்த மிகவும் பின்தங்கிய தோட்ட வைத்தியசாலை கடந்த 23-11-2008 முதல் அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சீரற்ற போக்குவரத்துக் காரணமாகவும் மருந்துத் தட்டுப்பாடு காரணமாகவும் இப் பிரதேசத்திலுள்ள பொது மக்கள் மிகவும் சிரமங்களை உள்நோக்கி வந்ததையடுத்து அதனை உடனடியாக தீர்க்கும் வகையில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்தே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உடுவர தோட்ட வைத்தியசாலையின் சகல வேலைத் திட்டங்களையும் பதுளையிலுள்ள பிரதான வைத்தியசாலையிலிருந்து மருத்துவர்கள் வாரத்திற்கு ஒரு முறை அவ்வைத்தியசாலைக்கு சென்று அங்குள்ள நோயாளிகளை பரிசோதித்து அவர்களுக்கான சகல மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

பூசா தடுப்பு முகாமுக்கு சென்ற விசாரணை மேற்பார்வை குழு

காணாமல் போதல், கடத்தல் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்யும் குழு பூசா முகாமிற்கு 27-11-2008 விஜயம் செய்யவுள்ளனர். அவர்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 361 ஆண், பெண் தமிழ் முஸ்லிம் கைதிகளை சந்தித்து அவர்களுக்கான விசாரணைகளை துரிதப்படுத்தி நடவடிக்கை விடுதலைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் வடக்கு, கிழக்கு இளைஞர்களும் 108 மலையக இளைஞர், யுவதிகளும் உள்ளதாகவும் இவர்களில் நிரபராதிகளாகக் காணப்படுபவர்களை விடுவிப்பதற்காகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்படுவதாகவும் குழு உறுப்பினர்களில் ஒருவரான பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மேற்படி கண்காணிப்பு குழுவின் அங்கத்தவர்களில் அமைச்சர் ராஜித சேனாரட்ண, ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார, பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன், பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸ், குழுவின் செயலாளர்களான ஆர். திவ்வியராஜன், லால் வெடிக்கார, பிரதி பொலிஸ்மா அதிபர் சிசிர மெண்டிஸ், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு இயக்குனர் சி.என். வாக்கிஸ்டர் உட்பட உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளும் பூசா முகாமிற்கு செல்லவுள்ளனர்.

வத்தேகம நகர பகுதியில் 19 பேர் கைது

மத்திய மாகாணம் கண்டி மாவட்டம் வத்தேகம நகரப் பகுதியில் பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின்போது 6 பெண்கள் உட்பட 19 தமிழ் பொதுமக்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந் நடவடிக்கை கடந்த 25-11-2008 ம் இடம் பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் கூடுதலானோர் வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தொழில் புரிபவர்கள், வியாபாரம் செய்பவர்கள், சாப்பாட்டுக் கடைகளில் வேலை செய்வோர்கள், போன்றோரே கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர் எனவும் ஒரு சிலரே வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்மாற்றி வெடிப்புக்குள்ளானதில் குடியிருப்பாளர்கள் மின்சாரமின்றி அவதி

தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தில் அமைந்துள்ள 400 கி.வோ மின்சாரத்தை விநியோகம் செய்கின்ற மின் பரிமாற்றியொன்று வெடித்து தகர்க்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இலங்கை மின்சார சபைக்கு 20 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக லிந்துலை மின்சார விநியோக அதிகாரி எஸ்.எம்.என் சமரக்கோன் தெரிவித்துள்ளார். இதனால் இந்த பிரசேத்தில் அமைந்துள்ள 400 குடியிருப்புகளுக்கான மின்சார விநியோகம் பாதிப்படைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Thursday, November 20, 2008


தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக அரசு உத்தரவாதம் வழங்காத பட்சத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாத நிலையை தோற்றுவிக்கும்

அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. 1970களில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை போல பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது யதார்த்தமான உண்மையாகும். இது ஊடகங்களின் மூலமாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போது எமது கட்சி அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது எமக்கு மிகப்பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே வரவுசெலவுத் திட்டத்தின் மீதூன இறுதி வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக அரசாங்கம் எந்தவிதமான உத்தரவாதத்தையும் வழங்காத பட்சத்தில் எமது கட்சி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் அது தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக நாம் செய்யும் துரோகமாகவே விமர்சிக்கப்படும்.
எனவே, வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்புக்கு முன்னர் அரசாங்கத் தரப்பிலிருந்து தொழிலாளர்களின் வருமானம் தொடர்பாக அரசாங்கம் அக்கறையை வெளிப்படுத்தாவிட்டால் எமது கட்சி எடுக்கின்ற அரசியல் நிலைப்பாட்டுக்கு கட்டுப்பட்டு நாம் வாக்களிக்க வேண்டிய கட்டயாத்தை ஏற்படுத்தும் என்பதை ஜனாதிபதி உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் சந்திரசேகரன் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனம் நமுனுகலை பெருந்தோட்ட கம்பனியிடம் ஒப்படைக்க தீர்மானம்

பதுளை மாவட்டம் பசளை பகுதி டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் கணவரல்ல, கோணகலை, கந்தஹேன, பிங்கராவ, ஹிந்தகல்ல, கிளனன் ஆகிய தோட்டங்கள் அக் கம்பனி நிர்வாகத்தின் வழங்கப்பட்டிருந்த குத்தகை ரத்து செய்யப்பட்டு மீண்டும் நமுனுகலை பெருந்தோட்டத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி இந்த ஆறு தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகளை வழங்கப்பட வேண்டும் என்ற கலந்துரையாடலில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம், யோகராஜன் ஆகியோரும் கம்பனி சார்பாக போல் ரத்நாயக்க, ரவிகுமார ரட்ண, பிரவீர் சமரதிலக ஆகியோரும் 183 தோட்டக் கமிட்டித் தலைவர்களும் கலந்து கொண்டனர். மேற்படி தொழிலாளர்களுக்கான அக்டோபர் மாதத்துக்கான சம்பளமும், ஏனைய சட்டபூர்வ கொடுப்பனவுகள் அனைத்தும் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் வழங்கப்படுவதாகவும் இங்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் சம்பள விவகாரம் குறித்து பேச அழைப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் பெ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் 2006ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் இ.தொ.கா வின் வற்புறுத்தலினால் 2007ம் ஆண்டு மாற்றியடைக்கப்பட்டது. 2006ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தம் 2008ம் ஆண்டுவரை செல்லுபடியாகும் நிலையில் இருந்தாலும் இது ஒரு வருடத்தில் மீண்டும் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் அனைத்து தரப்பிலும் வலியுறுததப்படுகின்றது. இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் அங்கம் வகிப்பதால் இதனை மாற்றியமைக்கக் கூடிய தகுதியும் பலமம் பொறுப்பும் இச் சங்கத்திற்கு இருக்கிறது. எனவே இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கு சரியான தீர்மானமொன்றை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் எனக் கோரியுள்ளார்.

ஆறு தோட்டத் தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகள் தாமதமின்றி வழங்க உத்தரவு


பதுளை மாவட்டத்தில் டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் கணவரல்ல, கோணகலை, கந்தஹேன, பிங்கராவ, ஹிந்தகல்ல, கிளனன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகளை தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என கொழும்பிலுள்ள தொழில் திணைக்கள தலைமையகத்தில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் தொழில் ஆணையாளர் நாயகத்தின் தலைமையின் கீழ் திறைசேரியின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பட்டகொட, பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர், நமுனுகுல பிளான்டேசன் முகாமைத்துவ அதிகாரிகளான போல் ரட்ணநாயக்க, பிரவீன் டி சமரசிங்க மற்றும் டஸ்கர் பொட்லிங் கம்பெனியின் சார்பில் முகாமைத்துவ அதிகாரி மனோஜ் பத்திராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொழிற்சங்கங்களின் சார்பில் வடிவேல் சுரேஷ், கே. வேலாயுதம், ஆர்.எம்.கிருஷ்ணசாமி, நாந் அமரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர். 2006 ஆம் ஆண்டு ஜுன் 14 ஆம் திகதி நமுனுகுல பிளான்டேசன் முகாமைத்துவ நிர்வாகத்திற்குட்பட்ட மேற்படி தோட்டங்கள் டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டன. எனினும் பல்வேறுபட்ட நிர்வாக பிரச்சினைகளும் கொடுப்பனவு தொடர்பான இழுபறிகளும் தொடர்ந்த நிலையில் மேற்படி தோட்டங்களை அரசு பொறுப்பேற்க வேண்டும். அன்றேல் நமுனுகுல தோட்ட நிர்வாகம் மீண்டும் பொறுப்பேற்க வேண்டுமென்ற அழுத்தங்கள் தொடர்ந்தன.
2008 அக்டோபர் மாத சம்பளம் வழங்கப்படாமையால் ஆறு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும் 450 சேவையாளர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளலாயினர். அத்துடன் தொழிலாளர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம், சேவைக்காலப்பணம் மற்றும் இதர கொடுப்பனவுகளும் வழங்கப்படாமையும் குறிப்பிடத்தக்கது.

மரங்கள் தறிக்கப்படுவதால் தேயிலை அழிவுக்கு வழிவகுக்கும்


மாத்தளை மாவட்டம் உக்குவளை, ரத்வத்தை, பன்சலதன்ன மற்றும் எல்கடுவ தோட்டங்களில் பெருமளவு மரங்கள் தறிக்கப்படுவதால் பாரியளவு தேயிலை பயிர் அழிவுக்குட்பட்டு வருவதாக இப் பகுதிவாழ் தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனைத் எதிர்த்து அப்பகுதி தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியதையடுத்து தொழிலாளர்கள் சார்ந்த தொழிற்சங்கங்கள் தலையிட்டு மரங்கள் தறிக்கப்படுவது நிறுத்தப்பட்டடிருந்தன. எனினும் மீண்டும் மரம் தறிக்கப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சாலையை மூடிவிட திரைமறைவு சதி

உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சியை காரணம் காட்டி மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் பொறுப்பிலுள்ள தேயிலை தொழிற்சாலைகளை மூடி விடுவதற்கு திரைமறைவில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாக ம.ம.மு வலப்பனை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். மேற்படி பெருந்தோட்ட நிறுவனத்தின் பொறுப்பிலுள்ள கபரகலை, பிரேம்லீ, மத்துரட்ட, ஆல்கரனோயா, கிளன்டன், மெரி கோல்ட் ஆகிய தோட்டங்களின் தொழிற்சாலைகளின் பெறுமதிமிக்க உதிரிப் பாகங்கள் இரவோடு இரவாக தோட்ட நிர்வாகத்தினால் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் இத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனை தடுப்பதற்கு சமூக முரண்பாடுகளை ஒதுக்கி ஒன்று பட்டு தொழிலாளர் சமூகத்துக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டியது தொழிற்சங்களினதும் தோட்ட நிர்வாகங்களினதும் கடமையாகும்.

Sunday, November 16, 2008

தேயிலை விலை உலகச் சந்தையில் வீழ்ச்சியடையவில்லை- பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு

இலங்கையின் பிரதான பெருந்தோட்ட பயிரான தேயிலையின் விலை அண்மைக்காலமாக உலக சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் தோட்டக் கம்பனிகள் நட்டம் அடைந்துள்ளதென கூறப்பட்டு வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் இவ்வாறான தவறான பிரச்சாரங்களினால் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாந்து விடக்கூடாது என பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஓ.ஏ. இராமையா தெரிவித்துள்ளார் அமெரிக்க டொலருக்கு ஏற்பட்ட சிறிய வீழ்ச்சி தேயிலை, இறப்பர் ஏற்றுமதி வர்த்தகத்தில் சிறிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் சர்வதேச சந்தையில் தேயிலையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் பெருந்தோட்டங்களில் வேலை நாட்களை குறைத்து பெறப்படும் தேயிலையின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது பொய் பிரச்சாரமாகும்.
உலக சந்தையில் தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு தோட்டக் கம்பனிகளுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது என்று கூற முடியாது. அவர்களின் இலாபத்தில் சிறு விகிதம் குறைந்திருக்கலாம். இதற்கு எந்த விதத்திலும் தொழிலாளர்கள் பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் அல்லர். இதனால் தொழிலாளர்களின் வேதனைத்தையோ அல்லது வேலை நாட்களையோ குறைக்க முடியாது.

வரலாறு காணாத வகையில் கடந்த வருடத்தில் பெருந்தோட்டத்துறை ஏற்றுமதி வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கிடைத்திருக்கிறது. இவ்வாறு அபரிமிதமான வருமானத்தை ஈட்டுகின்ற போது கம்பனிகள் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. இலாபம் குறைந்தால் மட்டும் தொழிலாளர்களின் வேதனத்தைக் குறைக்கவும் வேலை நாட்களில் மாற்றம் கொண்டுவர தீர்மானிப்பதும் எவ்விதத்திலும் நியாயமான செயல் அல்ல. தொழிலாளர் வேதனம் இலாப நட்ட அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. மாறாக உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தினை பெற்றுக் கொள்வதே அவர்களது உரிமை.

ஏரி பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதால் செயற்பை இறப்பர் உற்பத்திக்கான இலாபம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதுடன் இயற்கை இறப்பருக்கு எப்போதும் போன்று கிராக்கி இருந்து கொண்டுதான் உள்ளது. ஒட்டு மொத்தத்தில் கூறுவதானால் பெருந்தோட்டத் தொழில் துறையின் எதிர்கால பொருளாதாரத்தை பாதிக்கும் அளவுக்கு பாரிய விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூற முடியாது. இதனை காரணமாக காட்டித் தொழிலாளர் விரோத செயல்களில் ஈடுபடுவதில் நியாயம் இல்லை.

எரிபொருள் விலை அதிகரிக்கும் போது அதற்கான காரணங்களை கூறி பல்வேறு துறைகளில் விலை அதிகரிப்பை செய்யும் அரசாங்கம் உலக சந்தையில் அதன் விலை குறையும் போது விலை குறைப்பை செய்வதில்லை. இதேபோல் கடந்த காலங்களில் எதிர்பாராத அளவுக்கு தேயிலைத்துறை இலாபத்தை சம்பாதித்துக் கொடுத்ததாக மார்தட்டிக் கொள்ளும் கம்பனிகள் அந்த இலாபத்தில் ஒரு சத வீதத்தையேனும் சரி தொழிலாளர்களுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளதா?

இப்போது இலாபத்தில் வீழ்ச்சி என்றவுடன் தொழிலாளர்களை சுரண்டுவதா? இது தொடர்பாக இலங்கை தேயிலை சபையும் அரசும் ஒரு தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என இராமையா கேட்டுக் கொண்டார்.

Friday, November 14, 2008

சந்தா பணத்திலிருந்து மலையக மாணவர்களுக்கு புலமை பரிசில் - மாகாண கல்வி அமைச்சர்

மலையக மாணவர்களுக்கு தொழிற்சங்க சந்தா பணத்திலிருந்து புலமை பரிசில் வழங்கி மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்வு கடந்த 12-11-2008 அன்று ஹட்டன சீடா கல்வி நிலையத்தில் இடம் பெற்றது. தொழிலாளர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமும், மத்திய மாகாணசபை கல்வி அமைச்சருமான எஸ் அருள்சாமி தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் அருள்சாமி தெரிவிக்கையில் தொழிற்சங்க சந்தா பணத்திலிருந்து மலையக மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்கி அவர்களை சிறந்த கல்விமான்களாக உருவாக்குவதே தமது நோக்கம் என்றார். இம் முன்மாதிரியை பின்பற்றி ஏனைய தொழிற்சங்கங்களும் இவ்வாறு வழங்குவதற்கு முன்வர வேண்டும் என்றார். வெளிநாடுகளிலுள்ள தொழிற்சங்கங்கள் தமது உறுப்பினர்களுக்கு சுற்றுலா செல்வதற்கு நிதி உதவி செய்கின்றது. பெரும் நிதியை சந்தவாக பெற்றுக் கொள்ளும் எமது தொழிற்சங்கங்ளும் இதை கடைபிடிப்பதில்லை. வெறுமனே தொழிற்சங்க போராட்டங்களில் விரயமாக்காமல் கல்வி துறையில் தமது தொழிற்சங்கம் அக்கறை செலுத்துவது குறித்து குறிப்பிட்டார். 5ம் ஆண்டு புலமைப்பரிகா ரூ 500 ஆகவும், உயர்தர வகுப்பில் தேறியவர்களுக்கு 750 ரூபாயும், பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு 1000 ரூபாயும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்குவோம் எனக் குறிப்பிட்டார். 70 ஆண்டுகளாக தொழிற்சங்கங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் யாராவது மாணவர்களின் கல்விக்காக புலமைப் பரிசுகளை ஏற்படுத்தினோமா? புலமைப் பரிசை பல்கலைக்கழகம் வரை செய்ய வேண்டுமென்பதே எமது நோக்கமாகும். அதை நாம் தொடர்ந்து செய்வோமென்றார்.
இனப்பிரச்சினைத் தீர்வுத் திட்டத்தில் மலையக மக்களின் அபிலாஷைகள் பற்றிய மலையக மக்கள் முன்னணியின் புதிய முன் மொழிவுகள்

இனப்பிரச்சினை தீர்வுக்காக சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை கடந்த 10-11-2008 சந்தித்த மலையக மக்கள் முன்னணியினர் மலையக மக்கள் அரசியல் அபிலாசைகளை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஏற்கனவே சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிடம் தாங்கள் முன்வைத்த முன் மொழிவுகளுடன் மேலும் சில புதிய முன்மொழிவுகளை முன் வைத்துள்ளனர். அந்த விடயங்கள் வருமாறு

இலங்கையில் வாழும் சகல தேசிய இனங்களினதும் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் உண்மையான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். (Genuine Power Sharing) மத்திய, ஊவா, சப்பரகமுவ ஆகிய மாகாணங்களில், மலையக தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து ஓர் அதிகாரப் பகிர்வு அலகு (POWER SHARING UNIT)உருவாக்கப்பட வேண்டும்.

தேவை ஏற்படின் மலையக தமிழர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களை தனியாக மீள் வரையறை செய்து இந்தியாவின் பாண்டிச்சேரி முறை போன்று அல்லது உலக நாடுகளில் உள்ள நிலத் தொடர்பற்ற முறைகளை அடிப்படையாக கொண்டு இவ் அதிகாரப் பகிர்வு அலகு உருவாக்கப்படலாம். உதாரணமாக (பெல்ஜியம் முறை)

நாம் முன் மொழிந்திருக்கும் மேற்படி அதிகார பகிர்வலகில் உள்ளடங்காத மலையக தமிழ் மக்கள் பல்வேறு மாவட்டங்களிலும் பரந்து காணப்படுவதால் அவர்களது அரசியல் அபிலாஷைகளையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் ஓர் அபிவிருத்தி சபை (DEVELOPMENT COUNCIL) அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதற்கு பெல்ஜியத்தில் காணப்படும் முறையைப் பயன்படுத்தலாம்.

நாம் முன் மொழிந்த அலகு பின்வரும் விடயங்களை கொண்டிருக்க வேண்டும்: சட்டவாக்க அதிகாரம் முழு அதிகாரத்துடன் கூடிய முதல் அமைச்சரும்அமைச்சர்கள் சபையும், ஆளுநர், காணி அதிகாரத்தோடும், பொலிஸ் அதிகாரத்தோடும் ஏனைய அதிகார அலகுகளுக்கு வழங்கப்படும் அனைத்து அதிகாரங்களும் நாம் முன் மொழிந்துள்ள அதிகார பகிர்வலகுக்கு வழங்கப்பட வேண்டும்.

அபிவிருத்தித் தேவைகளுக்கு வெளிநாட்டு உதவியை பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்க வேண்டும்.

மலையக தமிழ் மக்களின் இன விகிதாசாரத்திற்கேற்ப பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

இதனை உறுதிப்படுத்தும் வகையிலான தேர்தல் முறைமை மலையக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய எல்லை நிர்ணயக்குழு அமைக்கப்பட வேண்டும்.

மலையக தலைமைகள் வரவுசெலவு திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்

2009 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம், நாட்டு மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக, ஏற்கனவே பொருளாதார சுமைக்குள் சிக்கியிருக்கும், மக்களை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளவுயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டுக்கு பெருமளவு அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தோட்டப்புற மக்களின் அத்தியாவசியப் உணவுப் பொருளான கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் தோட்டத் தொழிலாளர்களே பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மலையக தலைமைகள் அம் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளது உண்மையானால் எதிர் வரும் வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என ஐ.தே.க மாத்தளை மாவட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

விடுமுறை நாட்களில் வேலை வழங்கி தொழிலாளர்களை தோட்டக் கம்பனிகள் ஏமாற்றுகின்றனர்.

தோட்டக் கம்பனிகள் விடுமுறை நாட்களில் வேலை வழங்கி, ஆண், பெண் தொழிலாளர்களை ஏமாற்றி வருவதுடன் அவர்களது உழைப்பை சுரண்டுவதாக சுட்டிக்காட்டியுள்ள தொழிலாளர் விடுதலை முன்னணியின் தலைவர் டி.அய்யாத்துரை இதற்கு தோட்டக் கமிட்டித் தலைவர்கள் துணைபோவது கண்டிக்கத்தக்க விடயமாகும் எனத் தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படுமானால் சாதாரண நாட்களைப் போல 16 கிலோவிற்கான சம்பளப் பணமே வழங்கப்பட வேண்டும். இதுவே தொழிற்சங்கத்தின் சட்டமும் நீதியுமாகும். ஆனால் தோட்டக் கம்பனிகள் ஒன்றரை நாள் சம்பளத்திற்கு 24 கிலோ கொழுந்து பறிக்கும்படி தோட்ட நிர்வாகங்கள் நயவஞ்சகமாக தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுகின்றனர்.

உலகச் சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சி- தொழிலாளர்களுக்குரிய கொடுப்னவுகளை வழங்க நிர்வாகம் மறுப்பு

உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து இரத்தினபுரி மாவட்டத் தொழிலாளர்களுக்குரிய வேலைவாய்ப்பினையோ அல்லது உரிய சம்பளத்தையோ வழங்குவதற்கு தோட்ட நிர்வாகங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளதாக தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் மாதமொன்றுக்கு 24 நாட்கள் வேலை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 12 நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படுகின்றது. இவ்வாறு வழங்கப்படும் 12 நாட்களுக்கு அரை நாள் சம்பளப் பணமே வழங்கப்படுகின்றன. மேலதிக கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. மாதத்தில் 20 க்கும் மேற்பட்ட நாட்கள் வேலை செய்தால் மாத்திரமே 75 சதவீத வரவு கொடுப்பனவு, மேலதிக கொடுப்பனவுகள் உட்பட நாளொன்றுக்கு தலா 290 ரூபா சம்பளமாக தொழிலாளியொருவருக்கு கிடைக்கப்பெறும். இல்லையெனில் நாளொன்றுக்கு தலா 200 ரூபா வழங்கப்படுகின்றன. தற்போது இந்த 200 ரூபாவிலும் 1/2 பேர் என்ற பெயரில் நாளொன்றுக்கு தலா 100 ரூபா சம்பளமாக வழங்கப்படுகின்றன. இரத்தினபுரி கலபட (கீழ்ப்பிரிவு) தோட்டம்நிவித்திக்கலை, தொலஸ்வலை தோட்டம், கரவிட்ட பகுதி தோட்டங்களில் நாளொன்றுக்கு 1/2 நாள் சம்பளமே (100ரூபா) வழங்கப்படுகின்றன. நாள் முழுதும் வெயிலும், மழையிலும் கஷ்டப்பட்டும் தமக்கு தலா 100 ரூபா சம்பளம் வழங்கப்படுவது என்பது மிகவும் கொடுமையான விடயமென சுட்டிக்காட்டும் தொழிலாளர்கள் தமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று கோரி, தத்தமது தொழிற்சங்களில் முறையீட்டுள்ளனர். இதேவேளை கலபட தோட்டத்தில் அக்டோபர் மாதம் 20 நாட்கள் வேலை செய்த போதிலும் நாளொன்றுக்கு (100 ரூபா) 1/2 பேர் என்றடிப்படையில் 10 நாட்களுக்கான சம்பளமே வழங்கப்பட்டுள்ளன இதனால் இத்தோட்டத் தொழிலாளர்கள் அக்டோபர் மாதச் சம்பளத்தை வாங்க மறுப்புத் தெரிவித்துள்ளனர். இது இவ்வாறிருக்க பெல்மதுளை ரில்ஹேன தோட்டத்தில் சுழற்சி முறையிலான வேலை வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.